பெங்களூரு: துலீப் டிராபி தொடரில் இளம் வீரர் சர்ஃபராஸ் கான் 3 இன்னிங்ஸ்களில் இரு முறை டக் அவுட்டில் வெளியேறியுள்ளது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில வாரங்களுக்கு முன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் சர்ஃபராஸ் கான், அபிமன்யூ ஈஸ்வரன், ஹனுமா விஹாரி உட்பட ரஞ்சி டிராபி தொடரில் சிறப்பாக ஆடி வரும் எந்த வீரரும் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் ரசிகர்கள் மட்டுமல்லாமல் முன்னாள் வீரர்களான சுனில் கவாஸ்கர், சவுரவ் கங்குலி, அபினவ் முகுந்த் உள்ளிட்ட வீரர்களும் கொந்தளித்தனர்.

குறிப்பாக தொடர்ச்சியாக 3 ரஞ்சி சீசன்களில் சிறப்பாக ஆடிய சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்படாததற்கு என்ன காரணம் என்று பலரும் கேள்வி எழுப்பினர். இதையடுத்து பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில், சர்ஃபராஸ் கானின் ஃபிட்னஸ் மற்றும் ஒழுங்கீனமின்மையே அவர் இந்திய டெஸ்ட் அணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு காரணம் என்று கூறப்பட்டது. இதனால் ரசிகர்களும் கடுமையாக விமர்சிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் துலீப் டிராபி தொடருக்கான மேற்கு மண்டல அணிக்கு சர்ஃபராஸ் கான் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் சிறப்பாக ஆடும் பட்சத்தில் சர்ஃபராஸ் கானின் இந்திய அணிக்கான வழியை யாராலும் தடுக்க முடியாது என்ற பார்க்கப்பட்டது. ஆனால் சர்ஃபராஸ் கான் மத்திய மண்டல அணிக்கு எதிராக முதல் அரையிறுதிப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் டக் அவுட்டிலும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இதனால் சர்ஃபராஸ் கான் தரமான வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக விளையாட திணறுவதாக ரசிகர்களும் விமர்சிக்க தொடங்கினர். இந்த நிலையில் தெற்கு மண்டல அணிக்கு எதிரான துலீப் டிராபி இறுதிப்போட்டியில் சர்ஃபராஸ் கான் களமிறங்கினார். அவருக்கு முன் களமிறங்கிய புஜாரா 9 ரன்களிலும், சூர்யகுமார் யாஹவ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதனால் அணியை பாதுகாக்கும் பொறுப்பு சர்ஃபராஸ் கானுக்கு வந்தது. ஆனால் தென் மண்டல அணியின் வித்வேத் ஈஸ்வரப்பா வீசிய பந்தில் சர்ஃபராஸ் கான் டக் அவுட்டாகி வெளியேறினார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சர்ஃபராஸ் கான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படாததற்கு அவரின் பேட்டிங் ஃபார்மே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.