மும்பை: ஐபிஎல் சீசன் 11ல் இன்று நடக்கும் ஒன்பதாவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த சீசனில் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாத மும்பை மற்றும் டெல்லி அணிகளில், ஒரு அணிக்கு முதல் வெற்றி கிடைக்க உள்ளது.
ஐபிஎல் சீசன் 11 போட்டிகள் துவங்கியுள்ளன. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த சீசனில் இதுவரை 8 ஆட்டங்கள் முடிந்துள்ளன. அனைத்து அணிகளுமே தலா 2 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள், தான் விளையாடிய இரண்டு ஆட்டங்களிலுமே வென்று, தலா 4 புள்ளிகளைப் பெற்றுள்ளன. ரன் ரேட் அடிப்படையில் ஐதராபாத் அணி முதலிடத்தில் உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், ராய.ல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தலா ஒன்றில் வென்று, 2 புள்ளிகளுடன் உள்ளன.
அதே நேரத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் மற்றும் இதுவரை கோப்பையை வெல்லாத டெல்லி டேர்டெவில்ஸ அணிகள் இரண்டு ஆட்டங்களிலுமே தோல்வியடைந்துள்ளன. இந்த நிலையில், மும்பையில் நடைபெறும் சீசனின் 9வது ஆட்டத்தில் மும்பையும், டெல்லியும் மோதுகின்றன. இதில் முதல் வெற்றியைப் பெறப் போவது யார் என்பது தெரியவரும்.
இதுவரை இரு அணிகளும் 20 முறை மோதியுள்ளன. அதில் 11 முறை மும்பை அணியும், 9 முறை டெல்லி அணியும் வென்றுள்ளன. மும்பை மைதானத்தில் நடந்துள்ள 6 ஆட்டங்களில், 5ல் மும்பை வென்றுள்ளது.
இந்த இரண்டு அணிகளில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பையின் நிலைமைதான் மிகவும் பரிதாபமாக உள்ளது. மூன்று முறை சாம்பியனான மும்பை அணி, இந்த சீசனில் இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலுமே கடைசி நேரத்தில் வெற்றியைப் பறிகொடுத்துள்ளது. முதல் ஆட்டத்தில் கடைசி நேரத்தில் பிராவோ அதிரடியாக விளையாட, சிஎஸ்கே அணி வென்றது. கடைசியாக நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் இழப்புக்கு மும்பை அணி 147 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதே நேரத்தில் ஐதராபாத் அணியை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால், கடைசியில் ஐதராபாத் அணி 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து, கடைசி பந்தில் வென்றது.
இதே நிலையில்தான் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன் கவுதம் கம்பீரும் உள்ளார். அவர் கேப்டனாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை கோப்பையை வென்று தந்தார். தனது சொந்த ஊரான டெல்லி அணிக்கு திரும்பியுள்ளார். டெல்லி இதுவரை ஒருமுறை கூட பைனல்ஸ் போனதில்லை. இந்த சீசனில் முதல் லீக் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. அதனால் 6 ஓவர்களில் 71 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 4 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
இன்று மாலை 4 மணிக்கு துவங்கும் போட்டியில் இரு அணிகளில் யாருக்கு முதல் வெற்றி கிடைக்கப் போகிறது என்பது தெரிய வரும். முதல் வெற்றிக்காக இரு அணிகளும் போராடும் என்பதால், ஆட்டம் சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.