மும்பை: ஐபிஎல் 9வது சீசனில் புதுமுக அணியாக களமிறங்கியுள்ள குஜராத் லயன்ஸ், வலுவான மும்பை இந்தியன்ஸ் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியையும் ருசித்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற சுரேஷ் ரெய்னா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இன்று திருமணம் நடைபெறவுள்ளதால் ஜடேஜா குஜராத் அணியில் இடம்பெறவில்லை.

மும்பை அணியில் ரோகித் சர்மாவும், பார்த்திவ் படேலும் தொடக்க வீரராக களமிறங்கினார்கள். கொல்கத்தா போட்டியின் போது அசத்திய ரோகித் இந்த முறை 7 ரன்களில் குல்கர்னி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய பாண்ட்யா இந்த ஆட்டத்திலும் 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பிறகு களமிறங்கிய ஜோஸ் பட்லர் (16), ராயுடு (20), போலார்ட் (1) மற்றும் ஹர்பஜன் (8) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் மும்பையின் ரன் வேகம் மிகவும் குறைந்தது.
இறுதியில் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் குணால் பாண்டியா 11 பந்துகளில் 20 ரன்களும், டிம் சவுதி 11 பந்துகளில் 25 ரன்களும் எடுக்க, மும்பை அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 143 என்ற கெவுரவமான ரன்னை எடுத்தது.
மும்பை அணியைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத்திற்கு மெக்கல்லம் 6 ரன்னில் அவுட் ஆனார், ரெய்னா 27 ரன்னில் வெளியேறினார். தினேஷ் கார்த்திக் (9), பிராவோ (2), ரன்னில் பெவுலியன் திரும்ப குஜராத்தின் ரன் விகிதம் குறைந்தது. இருப்பினும் களத்தில் பின்ச் அடித்து ஆடி அரைசதம் கடந்தார்.
இதனிடையே ஒருகட்டத்தில் பால்க்னர் (7), பிரவிண்குமார் (0) அவுட்டாக்கி குஜராத் அணிக்கு ஷாக் கொடுத்தார் மும்பை வீரர் மெக்லீனகன்.
இறுதியில் கடைசி ஓவரில் குஜராத்தின் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைபட்டன. பும்ரா வீசிய அந்த ஓவரின் முதல் 2 பந்தில் பின்ச் 3 ரன்கள் எடுத்தார். அடுத்த இரு பந்துகளில் பவுண்டரி உள்பட 5 ரன்கள் சேர்த்தார் குல்கர்னி. வெற்றி யாருக்கு என்பது இரு அணிக்கும் சவாலாக அமைந்தது.
அப்போது வீசிய 5வது பந்தில் 2 ரன் எடுத்த பின்ச், கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி குஜராத்தின் ஹாட்ரிக் வெற்றி கனவை நினைவாக்கினார்.. குஜராத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை ருசித்தது.
67 ரன்கள் குவித்த பின்ச் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இது அவர் பெறும் 3-வது ஆட்டநாயகன் விருது ஆகும். குஜராத் அணி தான் விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.