மும்பை : விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மீண்டும் சொதப்பலான பேட்டிங்கை வெளிப்படுத்தியுள்ளார்.
அண்மையில் வெளியான பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் இருந்து தேர்வு குழுவினரால் நீக்கப்பட்டவர் ஸ்ரேயாஸ் ஐயர். இந்திய அணிக்காக கடந்த 5 மாதங்களில் 12 ஒருநாள் போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள், 2 டி20 போட்டிகளில் விளையாடிய நிலையிலும், ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் ஒப்பந்தம் மறுக்கப்பட்டது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு பின், அடுத்த 3 போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் நீக்கப்பட்டார். அதேபோல் ஓய்வெடுக்காமல் ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக விளையாடுமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் திடீரென முதுகுபிடிப்பு காரணமாக ரஞ்சி டிராபி தொடரில் பங்கேற்பதில் இருந்து பின் வாங்கினார் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஸ்ரேயாஸ் ஐயரை அறிவித்த அடுத்த நாளே, என்சிஏ தரப்பில் கேஎல் ராகுலை தவிர்த்து எந்த புதிய வீரருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கடிதம் எழுதியது. இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் பொய் கூறிவிட்டு கேகேஆர் அணியின் பயிற்சி முகாமில் பங்கேற்றது தெரிய வந்தது. இதனால் கோபமடைந்த அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு ஸ்ரேயாஸ் ஐயர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது.
இதன்பின் உடனடியாக ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக அரையிறுதி போட்டியில் விளையாடினார். தமிழ்நாடு அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 3 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் ஃபார்ம் குறித்த கேள்விகள் எழுந்தது. இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது சரி என்று ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் விதர்பா அணிக்கு எதிரான ரஞ்சி டிராபி இறுதிப்போட்டியில் மும்பை அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடி வரும் மும்பை அணி, 92 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்கள் மட்டுமே எடுத்து உமேஷ் யாதவ் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் ஃபார்மை இழந்துவிட்டார் என்றும், டெஸ்ட் அணியில் அவர் கம்பேக் கொடுப்பது எளிதல்ல என்றும் ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளது.