இவங்கதாங்க கடவுள்.. இதுதாங்க நல்ல மனசுங்குறது.. ரத்ததானம் செய்த மும்பை ரஞ்சி வீரர்கள்
மும்பை: மும்பை ரஞ்சி அணி வீரர்கள் ரத்ததானம் செய்துள்ளனர். கொரோனா காரணமாக ரத்ததானம் செய்வது குறைந்து விட்டது. இந்த நிலையில் மும்பை வீரர்களின் ரத்ததானம் பலருடைய பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
மும்பை ரஞ்சி அணி வீரர்களான வினாயக் போயர், ராய்ஸ்டன் டயஸ் உள்ளிட்ட 90 வீரர்கள் நேற்று ரத்ததானம் செய்து மும்பை மக்களின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளனர்.

மும்பை ஜேஜே மருத்துவமனை சார்பில் இந்த ரத்ததான முகாம் நடத்தப்பட்டது. மும்பை கிரிக்கெட் சங்கம் சார்பில் இந்த ரத்ததான முகாமில் வீரர்கள் கலந்து கொண்டு ரத்தத்தை தானமாக அளித்தனர்.
விரார் பகுதியில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் நடந்த இந்த ரத்ததான முகாமில் பல்வேறு கிரிக்கெட் அணிகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர். கிரிக்கெட் வீரர்கள் தவிர முன்னாள் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் பங்கஜ் ஜாக்கூர், நாயக் உள்ளிட்டோரும் ரத்ததானம் செய்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நாம் கடினமான சமயத்தில் இருக்கிறோம். இந்த நேரத்தில் ரத்தம் அதிகம் தேவைப்படுகிறது. கொரோனா நோயாளிகள் பலரும் கூட ரத்த தேவையால் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மக்கள் தாராளமாக ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும். நாட்டின் சேவையில் அனைவரும் பங்களிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
நாடு முழுவதும் தற்போது கொரோனா பரவல் காரணமாக ரத்ததானம் செய்வது குறைந்து விட்டது. பல இடங்களில் மருத்துவமனைகளில் ரத்ததானம் செய்வதில் சிக்கல் நிலவுகிறது. இதனால் ரத்ததானம் செய்வோர் குழப்பமடைந்துள்ளனர். இந்த நிலையில்தான் மத்திய சுகாதார அமைச்சகம் ரத்ததானம் செய்வதை ஊக்குவித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications