மும்பை : ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருந்தது. இந்த நிலையில் தற்போதைய சீசனில் விளையாடிய ஏழு போட்டிகளில் ஐந்தில் வெற்றி பெற்று சிஎஸ்கே அணி தற்போது முதல் இடத்தில் இருக்கிறது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியில் இடம் பெற்றுள்ள ஒரு வீரர் மட்டும் சரியாக விளையாடவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி கார்த்திக் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் என்னைக் கேட்டால் சி எஸ் கே அணியில் நியூசிலாந்து சுழற் பந்துவீச்சாளர் மிட்செல் சாண்ட்னரை தீக்ஷனாவுக்கு பதில் பயன்படுத்த வேண்டும்.

நான் நடப்பு சீசனில் முதல் நாளிலிருந்து பார்த்து வருகிறேன். மிட்செல் சாண்ட்னர் அனைத்து பேட்ஸ்மேன்களுக்கும் எதிராகவும் அனைத்து சூழ்நிலைகளிலும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். சாண்ட்னரை விட ஒரு நல்ல பேட்ஸ்மேனும் பந்துவீச்சாளரும் உங்களுக்கு கிடைக்க மாட்டார்கள்.
அதுவும் இல்லாமல் அவர் பில்டிங்கில் சூப்பராக செயல்படுவார். எந்த தூரத்திலிருந்தும் பந்தை நன்றாக எரிவார். எனவே மிச்செல் சாண்ட்னரை சிஎஸ்கே அணி நிச்சயம் பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும். ஆனால் தோனி நிச்சயமாக வித்தியாசமாக தான் செயல்படுவார்.

இதேபோன்று சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சு எப்போதுமே ஒரு குறையாக தான் இருந்து வருகிறது. ஆனால் இம்முறை ஆகாஷ் சிங் நன்றாகவே செயல்பட்டு இருக்கிறார். கடந்த ஆட்டத்தில் தொடர்ந்து நான்கு ஓவர்களை அவர் வீசினார். இதேபோன்று 20 வயதான இலங்கை வீரர் பதிரானாவை தோனி நன்றாக பயன்படுத்தி வருகிறார்.
டெத் ஓவர்களில் பதிரானா ரன்களை கட்டுப்படுத்துகிறார். தோனிக்கு கீழ் பதிரானா நன்றாக வளர்ந்து வருகிறார். இதனால் தோனி அவரை ரிமோட் கண்ட்ரோல் போல் பயன்படுத்தி தமக்கு என்ன தேவையோ அதை தோனி செய்து வருகிறார். எனவே பதிரானாவை தாம் தோனியாக இருந்தால் அணியை விட்டு நீக்க மாட்டேன் என்று முரளி கார்த்திக் கூறியுள்ளார்.