மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள சுப்மன் கில்லை சுதந்திரமாகச் செயல்படவிடாமல், இரண்டு மூத்த வீரர்கள் அவருக்கு ஆலோசனை சொல்லி வருகிறார்கள் என முன்னாள் வீரர் முரளி கார்த்திக் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
இந்தியா டெஸ்ட் அணி இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் தோல்வியடைந்து இருந்தது. இத்தனைக்கும் முதல் போட்டியில் இந்திய அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் நன்றாக பேட்டிங் செய்து ரன்கள் குவித்து இருந்தது. இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற சவாலான இலக்கை நிர்ணயம் செய்திருந்தது. ஆனால், பந்துவீச்சில் சொதப்பிய இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த நிலையில் இது பற்றி பேசிய முரளி கார்த்திக், "நாம் நிறையச் சாக்குப்போக்கு சொல்லலாம். ஆனால், பிரச்சனை என்னவென்றால், இந்திய அணி 835 ரன்கள் சேர்த்தது. ஒரு பந்துவீச்சாளர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். அப்படி இருந்தும் இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இருக்கிறது.
மேலும், இந்தப் போட்டியில் நிறைய கேப்டன்கள் இருந்தார்கள். அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. கே.எல். ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் சுப்மன் கில்லுக்கு ஏதேனும் ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், சுப்மன் கில் தான் உண்மையான கேப்டன். இந்தச் செயல்பாட்டை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அணியில் ஒரே ஒரு கேப்டன் தான் இருக்க வேண்டும். மூத்த வீரர்கள் ஒன்று அல்லது இரண்டு முறை ஏதேனும் ஆலோசனை அளிக்கலாம். ஆனால், அதை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்கக் கூடாது" என்றார்.
இந்த விஷயத்தை ஏற்கனவே பல முன்னாள் வீரர்களும் சுட்டிக்காட்டி உள்ளனர். சுப்மன் கில் கேப்டனாக இந்திய அணியை தனது கட்டுப்பாட்டில் வைக்கவில்லை எனவும், அதை இங்கிலாந்து அணி சரியாகப் பயன்படுத்தி இந்தப் போட்டியில் வென்றது எனவும் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
எனினும், சுப்மன் கில் இப்போதுதான் கேப்டனாகப் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரை இதில் குற்றம் சுமத்த முடியாது. அதே சமயம், அவருக்குப் போதிய அனுபவம் வரும் வரை காத்திருந்து அவரை கேப்டனாக ஆக்கி இருக்கலாம், இந்திய அணி நிர்வாகம் அவசரப்பட்டு சுப்மன் கில்லை கேப்டனாக நியமித்துவிட்டதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.