தடுமாறுவார்கள்
இந்த நிலையில் செய்தியாளரிடம் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி கார்த்திக், சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களை அமைத்தால் பாதிக்கப்படுவது இந்திய அணி வீரர்கள் தான் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ஒரு காலத்தில் இந்திய அணியில் சுழற் பந்து வீச்சை எளிதாக எதிர்கொள்ளும் ஜாம்பவான்கள் இருந்ததாகவும், ஆனால் தற்போது இந்திய அணியில் எந்த ஒரு வீரரும் சுழற் பந்து வீச்சை எதிர்கொள்ள தடுமாறி வருவதாகவும் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் நடந்தது
சமீபத்தில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கூட சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்தது ஆட்டம் இழந்ததை முரளி கார்த்திக் சுட்டி காட்டியுள்ளார். இதுவே பந்து வீச்சு எடுபடாத ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் சுழல் பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது எந்த சிரமமும் பட மாட்டார்கள் என்பதை குறிப்பிட்டுள்ள முரளி கார்த்திக், இரண்டாவது அல்லது மூன்றாவது நாளிலிருந்து சுழற் பந்து வீச்சுகு எடுபடும் மைதானத்தை தயாரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பேட்ஸ்மேன்கள் இல்லை
சீனியர் அணி வீரர்கள் மட்டுமில்லாமல் தற்போது உள்ளூர் கிரிக்கெட்டிலும் எந்த ஒரு வீரரும் சுழற் பந்துவீச்சை சிறப்பாக விளையாடுவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாம் சிறுவயதில் விக்ரம் ராதோர், சரத் ,செந்தில்நாதன் போன்ற திறமை வாய்ந்த வீரர்களுக்கு பந்து வீசி வளர்ந்ததாகவும், ஆனால் இப்போது அப்படி ஒரு தரமான பேட்ஸ்மேன்கள் ரஞ்சி கிரிக்கெட்டில் கூட விளையாடவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார். இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள திணறுகிறார்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் முரளி கார்த்திக் கூறியுள்ளார்.
குல்தீப்பை சேருங்கள்
மேலும் ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக அமைக்கப்பட்டால் இந்திய அணியில் குல்தீப் யாதவையும், மூன்றாவது பந்துவீச்சாளராக அக்சர் பட்டேலையும் சேர்க்க வேண்டும் என்று கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். சுழற் பந்துவீச்சு ஆடுகளம் அமைத்தால் எதிரணி வீரர்கள் தடுமாறுவார்கள் என்ற காலம் போய் தற்போது இந்தியன் பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்ற காலம் வந்துவிட்டது என்பதையே இது காட்டுகிறது என ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கு ஆபத்து
முரளி கார்த்திக்கின் இந்த கருத்து மிகவும் சரியானது என்றும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ரோகித் சர்மாவை தவிர சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் சதம் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விராட் கோலி ,புஜாரா, கே எல் ராகுல் ஆகியோர் இல்லாத நிலையில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைத்தால் அது இந்திய அணிக்கு தான் ஆபத்து என்பது குறிப்பிடத்தக்கது.