விட்டதை பிடித்த முரளி விஜய்.. டெஸ்ட் அணியில் மீண்டும் நுழைந்தார்.. எப்படி தெரியுமா?
மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்த மாதம் ஆடவுள்ளது.
அதற்கான இந்திய அணி அக்டோபர் 26 அன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் ஆச்சரியமளிக்கும் வகையில் பல வீரர்கள் பெயர் இருந்தது.
முரளி விஜய், ரோஹித் சர்மா, பார்த்திவ் பட்டேல் ஆகியோர் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டு இருந்த நிலையில், மீண்டும் இடம் பிடித்தனர்.

முரளி விஜய் நீக்கம்
முரளி விஜய் இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் போது முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ரன் குவிக்கவில்லை என கூறி அவரை கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் இருந்து நீக்கினர். அடுத்து, வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரிலும் இடம் பெறாத அவர், அதிரடியாக ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பெற்றுள்ளார்.

விஜய்க்கு வாய்ப்பு முடிந்ததா?
இது எப்படி நடந்தது? இந்தியாவில் நடக்கும் தொடரில் இடம் கிடைக்காத நிலையில், அவரது டெஸ்ட் அணி வாய்ப்பு முடிந்தது என்றே பலரும் எண்ணி இருந்தனர். அதை உடைத்து இந்திய அணியில் இடம் பெற்று விட்டார் முரளி விஜய்.

எசக்ஸ் அணியில் சேர்ந்தார்
அதற்கு காரணம், முரளி விஜய்யின் ஒரு துரித முடிவு தான். இங்கிலாந்து தொடரில் இருந்து தன்னை நீக்கிய அடுத்த சில வாரங்களில், இங்கிலாந்து கவுன்டி அணியான எசக்ஸ் அணியில் சேர்ந்தார். எந்த இங்கிலாந்து மண்ணில் அவர் சரியாக ஆடவில்லை என கூறினார்களோ, அதே மண்ணில் ரன் குவித்தால் தான் இந்திய அணியில் மீண்டும் இடம் பெற முடியும் என முடிவு செய்தே எசக்ஸ் அணியில் சேர்ந்தார்.

நிரூபித்தார் முரளி விஜய்
அங்கே சதம், அரைசதம் என அடித்து தன் பார்மை நிரூபித்தார். முரளி விஜய் கடைசியாக நடந்த ஆஸ்திரேலிய தொடரில் 482 ரன்கள் குவித்து இருந்தார். அதை மனதில் வைத்தும், அவர் பார்மை நிரூபித்து விட்டதாலும் மீண்டும் அணியில் சேர்த்துள்ளனர். ப்ரித்வி ஷா, ராகுல் துவக்க வீரர்களாக இருக்கும் நிலையில், முரளி விஜய்க்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications