நீ என் பொண்டாட்டி மாதிரி.. அதிர வைத்த ஷிகர் தவான்.. அசர வைத்த முரளி விஜய்
மும்பை: ஷிகர் தவானும் சரி, முரளி விஜய்யும் சரி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனி முத்திரை பதித்தவர்கள். கெளதம் கம்பீர் - வீரேந்திர ஷேவாக் ஜோடிக்குப் பிறகு தொடக்க ஆட்டக்காரர்களாக அசத்தியவர்கள். இந்த நிலையில் சுவாரஸ்யமான சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ளார் ஷிகர் தவான்.
2012ல் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்தியா தோல்வியைச் சந்தித்த பின்னர் கம்பீர் - ஷேவாக் ஜோடியின் தொடக்க ஆட்டம் முடிவுக்கு வந்தது.
அதைத் தொடர்ந்து நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கம்பீர் நீக்கப்பட்டு முரளி விஜய் தேர்வு செய்யப்பட்டார். அவரும் ஷேவாக்கும் இணைந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.

புதிய ஜோடி
அந்த டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளில் ஷேவாக் சரியாக ஆடவில்லை. எனவே அவரும் நீக்கப்பட்டார். 3வது போட்டியில் ஷிகர் தவான் சேர்க்கப்பட்டார். தவான் - முரளி விஜய் ஜோடி மாஜாயாலம் புரிந்தது. மொஹாலியில் நடந்த 3வது டெஸ்ட் போட்டியில் தவான் 187 ரன்களைக் குவித்தார். அது அவருக்கு முதல் டெஸ்ட் போட்டியாகும். விஜய்யும் அவரும் இணைந்து 289 ரன்களைக் குவித்தனர். விஜய் 153 ரன்கள் சேர்த்தார். இருவரும் இணைந்து ஷேவாக் - கம்பீரை வீட்டுக்கு அனுப்பினர்.

தொடக்கத்தில் கலக்கல்
தொடக்க ஆட்டக்காரர்களாக சில காலம் இருவரும் இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தனர். பின்னர் அந்த இடம் படிப்படியாக தகர்ந்து போனது. தாங்கள் வெற்றி பவனி வந்தபோது நடந்த சில சுவாரஸ்ய நினைவுகளை தற்போது பகிர்ந்துள்ளார் தவான். சமீபத்தில் நடந்த இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டின்போது ஆர். அஸ்வினிடம் அவர் சுவாரஸ்யங்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொண்டார்.

என் பொண்டாட்டி நீ
முரளி விஜய் குறித்து ஷிகர் தவான் கூறுகையில், முரளி அருமையான கேரக்டர். மைதானத்தில் மட்டுமல்ல வெளியிலும் எனக்கு ரொம்ப குளோஸ் ஆகி விட்டார். அருமையான மனிதர். மனதுக்காரர். நான் கொஞ்சம் அமைதியானவன், கூலான கேரக்டர். அவர் அப்படி இல்லை. மாறுபட்டவர். நான் அவரிடம் விளையாட்டாக சொல்வேன்.. யோவ் நீ என் பொண்டாட்டி மாதிரி என்பேன்.

சின்னச் சின்ன சண்டை
சில நேரங்களில் நாங்கள் இருவருமே ரன் எடுக்கத் தவறி அப்படியே நின்றிருப்போம். அதை வைத்து சின்னதாக ஒரு வாக்குவாதம் வரும்.. பிறகு அது சரியாகி விடும். அவரை சில நேரங்களில் புரிந்து கொள்வது கடினம். அவரைப் புரிந்து கொள்ள முதலில் நாம் அமைதியாக இருக்க வேண்டும். அப்போதுதான் அவரை சரியாக புரிந்து கொள்ள முடியும் என்றார் தவான்.

அருமையான வீரர்
ஆனால் அவர் ரொம்ப அருமையானவர். அதில் சந்தேகமே இல்லை. அவருடன் தொடக்க ஆட்டக்காரராக ஆடுவதில் எனக்கு எப்போதுமே மகிழ்ச்சிதான். நாட்டுக்காக சிறப்பாக ஆடியுள்ளோம். இன்னும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம். அவரை மீண்டும் சந்திக்க, ஜாலியாக பேசி சிரிக்க ஆர்வமாக உள்ளேன். சில நேரங்களில் அவர் பேசுவது புரியாது. ஆனால் ரொம்ப நாள் கழித்து யோசித்துப் பார்க்கும்போது அவர் சொன்னது புரிய வரும் என்றார் தவான்.

உழைப்பு தேவை
இப்போது இவர்களின் தொடக்க ஆட்டக்காரர் இடத்தை மயங்க் அகர்வாலும், பிருத்வி ஷாவும் எடுத்துக் கொண்டு விட்டனர். சில காலம் ரோகித் சர்மாவும் தொடக்க ஆட்டக்காரராக இருந்தார் என்பது நினைவிருக்கலாம். இப்போது இளம் ஆட்டக்காரர்களின் காலம் என்பதால் மீண்டும் ஷிகர் தவான் - முரளி விஜய் பொற்காலம் திரும்ப வருமா என்பது கேள்விக்குறிதான். . கடுமையாக உழைத்தால் மட்டுமே வாய்ப்புண்டு.


Click it and Unblock the Notifications