முரளி விஜய் நீக்கம்
முரளி விஜய் இந்திய டெஸ்ட் அணியில் நீண்ட காலமாக துவக்க வீரராக ஆடி வந்த நிலையில் இடை இடையே அவரது பேட்டிங் சொதப்பியதால் சராசரி கீழே விழுந்தது. மேலும், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் சுத்தமாக ரன் எடுக்காததால் அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
மீண்டும் வாய்ப்பு?
இவர் சென்றதை அடுத்து தவான், ராகுல் துவக்க வீரர்களாக களமிறங்கி வருகின்றனர். மேலும், இளம் வீரரான ப்ரித்வி ஷா அடுத்த துவக்க வீரர் வாய்ப்புக்காக காத்திருக்கிறார். இதனால், முரளி விஜயின் இந்திய அணி வாய்ப்பு கேள்விக் குறியாக இருக்கிறது.
மூளைக்காரர் முரளி விஜய்
இந்த நிலையில் முரளி விஜய், புத்திசாலித்தனமான முடிவாக எந்த இங்கிலாந்தில் தன் ஆட்டம் சரியில்லை என கூறினார்களோ, அங்கேயே ரன் குவித்து தன்னை நிரூபிக்க கிளம்பி விட்டதாக தெரிகிறது. எசக்ஸ் அணியில் இணைவது பற்றி கூறிய முரளி விஜய், "நான் இந்திய அணியோடு ஒரு மாதம் முன்பு வந்தேன். இங்கே உள்ள மக்கள் கூட்டம் மிகவும் அருமையானவர்கள் என்பதை பார்த்தேன். எசக்ஸ் அணிக்காக ஆடி, போட்டிகளை வெல்ல ஆவலாக உள்ளேன்" என கூறியுள்ளார்.
வாய்ப்பை பெறுவாரா?
இங்கிலாந்தில் இழந்த இந்திய அணி இடத்தை, எசக்ஸ் அணியில் ஆடி மீண்டும் பெறுவாரா? இளம் வீரர்கள் வரிசை கட்டி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், விஜய்யால் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியுமா என பார்க்கலாம்.