முஷ்பிகுர் செஞ்சுரி
இலங்கையும், வங்கதேசமும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றன. இதில், நேற்று முன்தினம் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அந்த அணி, 48.1 ஓவர்கள் முடிவில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சிறப்பாக ஆடிய முஷ்பிகுர் ரஹீம் 125 ரன்களை குவித்தார். பின்னர் ஆடிய இலங்கை அணிக்கு மழையின் காரணமாக 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 40 ஓவர்களில் 245 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலங்கை அணி 40 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.
காட்டிக் கொடுத்த மைக்
இந்த போட்டியில், இலங்கை அணி பேட்டிங் செய்த போது 11வது ஓவரை வங்கதேச வீரர் மெஹிதி ஹசன் வீசினார். அப்போது ஸ்டிரைக்கில் நின்ற குணதிலகா, பந்தை மெஹிதி ஹசனிடம் மெதுவாக தட்டிவிட, மறுமுனையில் நின்றிருந்த பதும் நிஷங்கா, சிங்கிள் எடுக்க கிறீஸை விட்டு வெளியேறினார். பிறகு, பவுலர் பந்தை தடுத்து நிறுத்த பின்வாங்கிவிட்டார். அப்போது வங்கதேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர், பவுலர் மெஹிதியிடம், " உன் வழியில் குறுக்கே வந்தால், பிடித்து அவனை கீழே தள்ளிவிடு' என ஆக்ரோஷமாக தெரிவித்தார். இவை ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவாக, கிரிக்கெட் ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.
உலகக் கோப்பை தோல்வி
ரஹீம் இதற்கு முன்பும், இதே போன்று வாயை கொடுத்து புண்ணாகி இருக்கிறார். இந்தியாவில், 2016ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நடைபெற்றது. அதில், இந்திய அணியும், வங்கதேசமும் மோதின. இதில், முதலில் பேட்டிங் செய்த இந்தியா 146 ரன்கள் எடுக்க, வங்கதேசம் 145 ரன்கள் எடுத்து, ஜஸ்ட் ஒரேயொரு ரன் வித்தியாசத்தில் தோற்றது. வங்கதேசத்திற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்த நிலையில், கடைசி மூன்று பந்துகளில் வரிசையாக விக்கெட் விழ நூலிழையில் வெற்றி வாய்ப்பை தவறவிட்டது.
முஷ்பிகுர் ட்வீட்
அதன் பிறகு, அரையிறுதிப் போட்டியில், வெஸ்ட் இன்டீஸிடம் இந்தியா தோல்வி அடைந்து தொடரை விட்டு வெளியேற நேரிட்டது. இப்போட்டியில் இந்தியா தோற்ற உடனேயே ட்வீட் செய்த முஷ்பிகுர் ரஹீம், "மகிழ்ச்சியென்றால் இதுதான். இந்தியா அரையிறுதியில் தோற்றுவிட்டது.. ஹா.. ஹா.. ஹா" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், அதன்பிறகு அவர், 'ஏன் இப்படியொரு ட்வீட் போட்டேனோ' என்று வெறுத்துப் போகும் அளவுக்கு ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளானார். ஏற்கனவே, இந்தியா தோற்ற கோபத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு, 'குறுக்க இந்த கவுஷிக் வந்தா' என்று முஷ்பிகுர் தலையை நகொடுக்க பிரித்து மேய்ந்துவிட்டனர். ஒருக்கட்டத்தில், சமாளிக்க முடியாமல் அந்த டீவீட்டை அவர் டெலிட் செய்துவிட்டார்.
மன்னிப்பு கேட்ட முஷ்பிகுர்
பிறகு, 'நான் வெஸ்ட் இண்டீஸ் அணியின் மிகத் தீவிர ரசிகன் என்பதால், இப்படி செய்துவிட்டேன். என்னுடைய கடுமையான சொற்களுக்கு வருந்துகிறேன்" என்று அவர் மறுபடியும் ட்வீட் செய்த பிறகு தான் ரசிகர்கள் ஓய்ந்தனர். வங்கதேசத்தில் மட்டுமல்ல, உலகளவில் திறமையான வீரர்களில் ஒருவராக அறியப்படும் முஷ்பிகுர், இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான தனது கேரக்டரால் தான் அவ்வப்போது அவப் பெயர்களை சம்பாதித்துக் கொள்கிறார்.