சமநிலையில் அணிகள்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நாளைய தினம் அகமதாபாத்தின் மோதேரா மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு வெற்றியை பெற்று இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஜோ ரூட் பாராட்டு
இந்நிலையில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த் நம்ப முடியாத ஷாட்களை அடித்து ஆடுவதாக இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார். அவருக்கு பந்து வீச சில பௌலர்கள் சிரமப்படுவதாகவும் ஆனால் அவரை ரன்களை தொடர்ந்து அடிக்க விடாமல் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
சரியாக பயன்படுத்த வேண்டும்
பந்த்தை அவுட்டாக்க கிடைக்கும் சந்தர்ப்பங்களை சரிவர பயன்படுத்தி அவரை சீக்கிரத்திலேயே அவுட்டாக்கி அனுப்ப வேண்டும் என்றும் ஜோ ரூட் மேலும் கூறியுள்ளார். நாளைய போட்டி மோதேரா மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
சிறப்பான வீரர்கள்
இங்கிலாந்து பௌலர்கள் ஜேம்ஸ் ஆன்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் இருவருக்கும் ஒரே நேரத்தில் அணியில் இணைந்து விளையாட எதிர்காலத்தில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இருவரும் வயதானாலும் தங்களது அனுபவங்களை கொண்டு சிறப்பாக விளையாடி வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.