
சாதனை படைத்த அஸ்வின்
ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் டென்னிஸ் லில்லி 56 போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகள் என்ற சாதனையை படைத்து இருந்தார். ஷான் வார்னே, முத்தையா முரளிதரன் போன்ற ஸ்பின்னர்கள் கூட இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.இந்த நிலையில் நேற்று நடந்த போட்டியில் 8 விக்கெட் எடுத்ததன் மூலம் அஸ்வின் இந்த சாதனையை முறியடித்துள்ளார். உலகிலேயே அதிவேகமாக 300 விக்கெட்டுகளை எடுத்த நபர்களின் பட்டியலில் அஸ்வின் தற்போது முதல் இடத்தில் உள்ளார்.

வாழ்த்து தெரிவித்த முத்தையா
இந்த நிலையில் அஸ்வினின் இந்த சாதனைக்கு முத்தையா முரளிதரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் ''அஸ்வின்தான் தற்போது உலகில் இருக்கும் ஸ்பின் பவுலர்களிலேயே மிகவும் திறமையானவர். அவர் தான் சிறந்தவர். 54 போட்டிகளில் 300 விக்கெட் எடுப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை'' என்று குறிப்பிட்டார்.

நல்ல எதிர்காலம்
அதேபோல் அஸ்வினின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதன்படி ''அஸ்வின் தற்போது ஒருநாள் அணியில் இல்லை. ஆனால் விரைவில் அவர் அணியில் சேர்க்கப்படுவார். அவருக்கு இப்போது 31 வயது ஆகிறது. இன்னும் 5 வருடம் அவர் விளையாட வாய்ப்பு உள்ளது. ஆகவே கண்டிப்பாக அவர் யாரும் செய்யாத பல சாதனைகளை செய்வார். வேகமாக 800 விக்கெட்டுகள் கூட எடுக்க வாய்ப்பு உள்ளது'' என்று ஆருடம் கூறினார்.

முத்தையா முரளிதரன் ரோல் மாடல்
அஸ்வின் ஏற்கனவே பலமுறை முத்தையா முரளிதரன் குறித்து தனது பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு அஸ்வின் தனது பேட்டி ஒன்றில் ''முத்தையா முரளிதரன் போல 800 விக்கெட்டுகள் எடுக்க வேண்டும். இப்போதைக்கு என்னுடைய இலக்கு அதுதான். விரைவில் 600 விக்கெட் எடுப்பேன். அதற்காக தீவிரமாக உழைத்து வருகிறேன்'' என்று கூறினார். தற்போது முத்தையா முரளிதரனே அஸ்வினை பாராட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications