மெல்போர்ன் : பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீராங்கனை ஜெசிக்கா ஜனாசன் தனது நீண்ட கால தோழியான சாரா வேரனை கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடி பல ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக திருமணம் தடைப்பட்டது.இதனை அடுத்து கொரோனாவுக்கு பிறகு திருமணம் செய்ய இந்த ஜோடி திட்டமிட்டிருந்த நிலையில் ஜெசிக்காவின் தந்தை 2021 ஆம் ஆண்டு புற்றுநோயால் காலமானார்.

இதனால் இவர்கள் திருமணம் மீண்டும் தள்ளப்பட்டது. தனது தந்தை மீது மிகுந்த பிரியம் கொண்டிருந்த ஜெசிக்கா தற்போது வெளியிட்டுள்ள கருத்து தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. தனது தந்தை மீது மிகவும் பாசத்துடன் இருந்ததாகவும் தந்தையின் இழப்பு தம்மை வெகுவாக வாட்டியதாகவும் கூறியுள்ளார்.
தமது தந்தைக்கு வண்டு என்றால் மிகவும் பிடிக்கும் என்றும் அவரது ஞாபகமாக வண்டின் உருவத்தை தான் டாட்டூ குத்தியிருந்ததாகவும் கூறியுள்ளார். திருமணம் நடைபெற்ற போது வண்டு ஒன்று தனது கையில் வந்து அமர்ந்ததாகவும் அந்த வண்டு திருமணம் முடிந்து நான் ஹோட்டலுக்கு செல்லும் வரை என் கூடவே இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இதை பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன் என்று குறிப்பிட்டுள்ள ஜெசிகா, தமது தந்தைக்கு வண்டு மிகவும் பிடிக்கும் என்பதால் தனது தந்தையின் ஆவி தான் வண்டு உருவத்தில் என்னுடன் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த தன்னுடைய காதலி சாராவும் மகிழ்ச்சி கொண்டதாகவும் நமது திருமணத்தை மிஸ் செய்யாமல் நம்முடனே தந்தை இருக்கிறார் என்று மனைவி சாரா கிண்டல் செய்ததாகவும் ஜெசிகா கூறியுள்ளார்.
இந்த நிகழ்வை நான் என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன் என்றும் தற்போது என்னுடைய தந்தை எப்போதுமே என் கூட இருப்பதாக தாம் உணர்வதாகவும் ஜெசிக்கா கூறியுள்ளார். ஜெசிக்காவின் இந்த பேட்டியை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள் .