சென்னை: சென்னை அணியின் கேப்டன் தோனியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு சிஎஸ்கே நட்சத்திர வீரர் ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தி பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு மிகமுக்கியக் காரணம் ரவீந்திர ஜடேஜா. கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி அசாத்திய வெற்றியை பெற்றுக் கொடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த மகிழ்ச்சியில் ஜடேஜாவை தூக்கிவைத்து கொண்டாடினார் மகேந்திர சிங் தோனி. களத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாத தோனி, அன்று மறைத்து வைத்திருந்த கண்ணீரையும் ரசிகர்களுக்கு காட்டினார். சென்னை அணியின் கேப்டன்சியில் இருந்து விலக நினைத்த போது, அவர் அடுத்த கேப்டனாக தேர்வு செய்தது ஜடேஜாவை தான். மீண்டும் ஜடேஜாவை தான் கேப்டனாக தோனி நியமிப்பார்.
அந்த அளவிற்கு தோனி ஜடேஜா இடையில் நட்பு உள்ளது. இந்த நிலையில் தோனியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில், "2009ஆம் ஆண்டில் இருந்து எல்லாமே தோனி தான்.. அப்போதிருந்து இப்போது மட்டுமல்ல.. எப்போதும் அவர் தான்.. பிறந்தநாள் வாழ்த்துகள் மாஹி பாய்.. விரைவில் மஞ்சள் ஜெர்சியில் சந்திப்போம்" என்று பதிவிட்டுள்ளார். இது சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
2009ல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஜடேஜா முதல்முறையாக இந்திய அணிக்கு அறிமுகமானார். அப்போதே ஜடேஜாவின் திறமையை கண்டுகொண்ட தோனி, 2012ஆம் ஆண்டு சென்னை அணிக்காக ஒப்பந்தம் செய்ய நிர்வாகிகளுக்கு உத்தரவிட, அன்று முதல் தோனியின் தளபதியாக ஜடேஜா சென்னை அணிக்கு விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.