
மாமா குடும்பம் மீது தாக்குதல்
அதாவது ரெய்னாவின் தந்தையின் சகோதரி குடும்பம் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் வசித்து வருகின்றனர். தரியல் என்ற கிராமத்தில் உள்ளது மாமாவின் வீடு. ஆகஸ்ட் 19 அன்று இரவு ஒரு மோசமான தாக்குதல் அந்த வீட்டில் நடந்தது. திடீரென ஆயுதங்களுடன் புகுந்த ஒரு கும்பல் வீட்டுக்குள் புகுந்து வெறித்தனமாக தாக்கியுள்ளனர். அதில் மொட்டை மாடியில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த ரெய்னாவின் அத்தை ஆஷா தேவி மற்றும் குடும்பத்தினர் சிக்கிக் கொண்டனர்.

கொலை வெறித் தாக்குதல்
இந்த கொலை வெறித் தாக்குதலில் ரெய்னாவின் மாமா அசோக் குமார் (58 வயது) உயிரிழந்தார். ஆஷா தேவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மகன்கள் கௌஷால் குமார் (32 வயது), அபின் குமார் (24 வயது) ஆகியோருக்கும் படுகாயம் ஏற்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மரணம் அடைந்த அசோக் குமாரின் 80 வயது தாயாரையும் அந்த கும்பல் தாக்கி அவரும் படுகாயமடைந்தார்.

மாமா மகனும் மரணம்
இந்த நிலையில் ஆஷா தேவியின் ஒரு மகனும் தற்போது உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான டிவீட் ஒன்றை தற்போது சுரேஷ் ரெய்னா போட்டுள்ளார். அதில், பஞ்சாபில் எனது குடும்பத்தினருக்கு நடந்த துயரம் மிகக் கொடூரமானது. வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. எனது மாமாவை கொடூரமாக வெட்டித் தள்ளியுள்ளனர். எனது அத்தை, அவரது மகன்கள் படுகாயமடைந்துள்ளனர். எனது அத்தை மகன் ஒருவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். எனது அத்தை தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவரை வென்டிலேட்டரில் வைத்துள்ளனர்.

ரெய்னாவின் வேதனை
இந்த வெறித்தனமான தாக்குதலில் யார் ஈடுபட்டது என்று இதுவரை தெரியவில்லை. ஏன் இப்படி ஒரு தாக்குதல் என்பதும் இதுவரை புரியவில்லை. பஞ்சாப் காவல்துறையை நான் கேட்டுக் கொள்வது, இந்த விவகாரத்தில் தீவிர விசாரணை நடத்தி, தவறு செய்த அந்த கொடியவர்களை சட்டத்தின் மூலம் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதுதான். அவர்களை சும்மா விடக் கூடாது. கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கையும் அவர் டிவீட்டில் டேக் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications