புவனேஸ்வர் குமார் நிலை
புவனேஸ்வர் குமார் உலகக்கோப்பை தொடருக்கு பின் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார். அந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளில் அவர் பங்கேற்றார். அவருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இரண்டு தொடர்களில் இல்லை
அதன் பின் நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும், அடுத்து நடைபெற இருக்கும் வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் டெஸ்ட் தொடரிலும் புவனேஸ்வர் குமாருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
விளக்கம் சொல்லாத பிசிசிஐ
அவரை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் இருக்க என்ன காரணம் என்பதை தேர்வுக் குழு தெளிவாக கூறவில்லை. புவனேஸ்வருக்கு என்ன மாதிரியான காயம்?, குணமாக எத்தனை காலம் ஆகலாம்? என எந்த தகவலையும் பிசிசிஐ கூறவில்லை.
எங்கே இருக்கிறார் புவனேஸ்வர்?
இந்த நிலையில், தற்போது புவனேஸ்வர் குமார் பெங்களூரில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் புத்துணர்வு பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், உண்மையில் அவர் காயத்தில் இருந்து மீள முடியாமல் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
கசிந்த தகவல்
இது பற்றி பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் பேசி இருக்கிறார். அவர் புவனேஸ்வர் குமார் நிலை பற்றியும், சாஹா, பும்ரா, ஹர்திக் பண்டியா விஷயத்தில் என்ன நடந்தது என்பது பற்றியும் கூறினார்.
சாஹாவுக்கு என்ன நடந்தது?
தேசிய கிரிக்கெட் அகாடமி புத்துணர்வு முகாமாக செயல்பட்டாலும், இது போன்ற விஷயங்கள் அங்கே தொடர்ந்து நடந்து வருகிறது. சாஹா தன் ஒன்றரை வருட கிரிக்கெட் வாழ்வை இழந்தார் என குறிப்பிட்டார் அந்த அதிகாரி. சாஹா கடந்த இரண்டு ஆண்டுகளாக தோள்பட்டை காயத்தால் அவதிப்பட்டு, பின் அறுவை சிகிச்சை செய்து அதில் இருந்து மீண்டார். அவரது காயம் பெரிதாக காரணமே தேசிய கிரிக்கெட் அகாடமி அவருக்கு சரியான வகையில் மருத்துவ உதவிகள் செய்யவில்லை என கூறப்படுகிறது. அதைப் பற்றி தான் கூறி இருக்கிறார் இந்த அதிகாரி.
பெரிய காயமா?
புவனேஸ்வர் குமார் காயம் பெரிதாக இல்லாவிட்டால், அவர் மீண்டும் களத்திற்கு வந்து கிரிக்கெட் ஆட ஏன் இத்தனை காலம் ஆகிறது என தெளிவான விளக்கத்தை கூற வேண்டியது தானே என கேட்கிறார் அந்த அதிகாரி. இவரது கருத்தால் புவனேஸ்வர் குமார் காயம் பெரிதாக இருக்கும் என தெரிகிறது.
பும்ரா, பண்டியா கதை
இது ஒரு புறம் என்றால், சமீபத்தில் காயமடைந்த பும்ரா மற்றும் ஹர்திக் பண்டியா தங்கள் காயத்தை குணப்படுத்திக் கொள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியை நாடாமல் இங்கிலாந்து சென்று சிகிச்சை மேற்கொண்டனர். அதிலும், பும்ராவிற்கு எந்த அறுவை சிகிச்சையும் தேவை இல்லை என்ற நிலையில் அவர் அங்கே சென்று முதல் கட்ட சிகிச்சை மேற்கொண்ட பின்னரே தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு திரும்பினார்.
உலகக்கோப்பையில்..
புவனேஸ்வர் குமார் விவகாரத்தில் தேசிய கிரிக்கெட் அகாடமி மட்டுமில்லாமல், அணி நிர்வாகமும் தவறு செய்துள்ளதாக கூறுகிறார் அந்த அதிகாரி. புவனேஸ்வர் குமார் கடந்த ஆண்டு முழுவதும் காயத்துடன் இருந்தாலும், அதனுடன் அவரை உலகக்கோப்பை தொடரில் ஆட வைத்தது அணி நிர்வாகம் என கூறி இருக்கிறார்.
எப்போது வருவார்?
புவனேஸ்வர் குமார் விஷயத்தில் தவறு செய்ததால் தான் பிசிசிஐ உண்மையை சொல்லாமல் மூடி மறைக்கிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் புவனேஸ்வர் குமார் மீண்டு வந்து விட வேண்டும் என பிசிசிஐ திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.