சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக முன்னாள் பிசிசிஐ மற்றும் ஐசிசி தலைவர் என். ஸ்ரீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு, ஐபிஎல் 2026 சீசன் ஏலத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கியமான காலத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
டிசம்பர் 2024-ல், சிஎஸ்கே-யின் நிறுவனர் மற்றும் உரிமையாளரான இந்தியா சிமெண்ட்ஸ், தனது சிமென்ட் வணிகத்தை அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு விற்றது, இதனால் ஸ்ரீனிவாசனும் அவரது குடும்பத்தினரும் தற்காலிகமாக அணியின் இயக்குநர் குழுவிலிருந்து விலகினர். இருப்பினும், பிப்ரவரி 2025-ல் ஸ்ரீனிவாசனும் அவரது மகள் ரூபா குருநாத்தும் இயக்குநர்களாக மீண்டும் இணைந்தனர்.

தற்போது, 80 வயதான ஸ்ரீனிவாசன், சிஎஸ்கேசிஎல்-ன் 2025 ஆண்டு அறிக்கையின்படி, தனது உறவினர் ஆர். ஸ்ரீனிவாசனுக்கு பதிலாக தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.ஸ்ரீனிவாசன் 2008-ல் சிஎஸ்கே அணியை உருவாக்குவதற்கு முக்கிய பங்காற்றினார். அவர் அணியை ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார்.
இந்தியா சிமெண்ட்ஸ் தலைவராக இருந்தபோது, அவர் அணியை நேரடியாக நிர்வகிக்காவிட்டாலும், சிஎஸ்கேவை வழிநடத்துவதில் முக்கிய பங்காற்றினார். .2011-ல் பிசிசிஐ தலைவராக இருந்த அவர் உலக கிரிக்கெட்டில் மிக முக்கியமான நபராக திகழ்ந்தார். ஆனால் 2013-ல் ஐபிஎல் ஸ்பாட்-ஃபிக்ஸிங் ஊழல் காரணமாக பதவி விலக வேண்டியதாயிற்று, இதன் மூலம் சிஎஸ்கே இரண்டு ஆண்டு தடையையும் பெற்றது.
இந்த நிலையில், ஸ்ரீனிவாசன் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ளார், மேலும் அவரது தளபதியான கே.எஸ். விஸ்வநாதன் 2028 வரை சிஎஸ்கேசிஎல்-ன் நிர்வாக இயக்குநராக தொடர்கிறார். இதற்கிடையில், ரூபா குருநாத் முழுநேர இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தோனி மீண்டும் சிஎஸ்கே அணியில் தொடர்ந்து விளையாடுவார் என்பதையே இது காட்டுகிறது.
இதனிடையே, சிஎஸ்கேசிஎல் நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "இந்தியன் பிரீமியர் லீக்-ன் 18வது சீசன் மார்ச் 22, 2025 அன்று தொடங்கி, மார்ச் முதல் ஜூன் 2025 வரை நடைபெற்றது. உங்கள் ஐபிஎல் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்றாலும், வரவிருக்கும் சீசன்களில் வலுவான கம்பேக்கை கொடுக்கும் என்று நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்."
"கிரிக்கெட் தென்னாப்பிரிக்காவின் T20 லீகில் 'ஜோபர்க் சூப்பர் கிங்ஸ்' மற்றும் அமெரிக்காவின் மேஜர் லீக் கிரிக்கெட்டில் 'டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்' போன்ற உலகளாவிய அணிகளுடன் மற்ற நாடுகளில் நடைபெறும் T20 லீகுகளில் பங்கேற்று, தனது உலகளாவிய தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. மேலும், வெளிநாடுகளில் கிரிக்கெட் அகாடமிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலமும், பல்வேறு விளையாட்டு அகாடமிகள் அமைத்து நிர்வகித்து வருகிறோம்."
"இவை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க உள்ளன. மேலும், சிஎஸ்கே நிர்வகிக்கும், விளையாட்டு மைதானங்கள், கோர்ட்டுகள் மூலம் வருமானத்தை ஈட்டி, அதனை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் வகையில் நிறுவன விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக" அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.