கொல்கத்தா: விராத் கோஹ்லி, 2012ம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாகியிருக்க வேண்டியவராம். ஆனால் அப்போதைய பிசிசிஐ தலைவர் சீனிவாசன் தலையீட்டால்தான் அது தடுக்கப்பட்டு விட்டதாக முன்னாள் தேசிய அணித் தேர்வாளர் ராஜா வெங்கட் என்பவர் கூறியுள்ளார்.
2011-2012ம் ஆண்டுக்கான ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவில் இடம் பெற்றிருந்தவர் ராஜா வெங்கட். அவர் கூறுகையில், 2011 இறுதியில் போய் 2012 தொடக்கம் வரை ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்த இந்திய அணியில் ஏகப்பட்ட கோஷ்டிகள் இருந்தன. இதனால் அணி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. கேப்டன் டோணி தலைமையில் அணி செயல்பட்டது.

அப்போது அணியில் மீண்டும் ஒற்றுமையைக் கொண்டு வரவும் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லவும் நான் கோஹ்லியை கேப்டனாக்கலாம் என்று பரிந்துரைத்தேன். கிட்டத்தட்ட பிற தேர்வாளர்களும் இதை ஆமோதித்தனர்.
ஆனால் பிசிசிஐ தலைவராக இருந்த சீனிவாசன் குறுக்கிட்டு அதைத் தடுத்து விட்டார். இதனால் எங்களால் கோஹ்லியை கேப்டனாக்க முடியாமல் போய் விட்டது.
அப்போது இந்திய அணி 3 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடைந்திருந்தது. கடைசி டெஸ்ட் போட்டி அடிலைடில் நடக்கவிருந்தது. அந்த சமயத்தில் தேர்வாளர்கள் மொகீந்தர் அமர்நாத், நரேந்திர ஹிர்வானி ஆகிய இருவரும் ஆஸ்திரேலியா போனார்கள். திரும்பி வந்த அவர்கள், அணியில் கோஷ்டிப் பூசல் அதிகரித்திருப்பதாக தெரிவித்தனர். டீம் ஸ்பிரிட்டே இல்லை என்றும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.
இதையடுத்தே ஒரு நாள் கிரிக்கெட்டுக்கு கோஹ்லியை கேப்டனாக்கலாம் என்று நாங்கள் யோசித்தோம். ஆனால் சீனிவாசனால் அது தடுக்கப்பட்டு விட்டது. வெளிநாடு செல்லும் அணியின் கேப்டனை பிசிசிஐ தலைவரின் ஒப்புதல் இல்லாமல் அறிவிக்க முடியாது. கேப்டனை மாற்ற வேண்டாம் என்று சீனிவாசன் கூறியதால் எங்களால் கோஹ்லியைக் கொண்டு வர முடியாமல் போய் விட்டது என்று கூறியுள்ளார் ராஜா வெங்கட்.