துபாய்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக இந்தியாவின் நரேந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
துபாயில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பில் ஹாக்கி தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் இந்தியாவின் ஹாக்கி தலைவராக உள்ள நரேந்தர் பத்ரா போட்டியிட்டார்.

அயர்லாந்தின் டேவிட் பல்பிர்னி மற்றும் ஆஸ்திரேலியாவின் கென் ரிட் ஆகியோரும் தேர்தலில் பங்கெடுத்தனர். இந்த வாக்கெடுப்பு ரகசியமான முறையில் நடைபெற்றது. மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் தேர்தல் நடைபெற்றது. இறுதியில் அதிக வாக்குகள் பெற்ற இந்தியாவின் நரேந்தர் பத்ரா வெற்றி பெற்றார்.
59 வயதான நரேந்தர் பத்ரா 2014ம் ஆண்டு முதல் இந்தியாவின் ஹாக்கி கூட்டமைப்பு தலைவராக செயல்பட்டு வருகிறார். ஹாக்கி தலைவராக ஐரோப்பியர்கள் மட்டும் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், ஆசியாவிலேயே முதன் முறையாக நரேந்தர் பத்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.