
9வது விக்கெட்
லண்டன் லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 391 ரன்கள் சேர்த்து, இந்தியாவை விட 27 ரன்கள் முன்னிலைப் பெற்றது. கேப்டன் ஜோ ரூட், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 180 ரன்கள் குவித்தார். இதையடுத்து, இரண்டாம் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. எனினும், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த முகமது ஷமி - பும்ரா ஜோடி பிரமாதமாக விளையாடியது. 9வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 89 ரன்கள் குவித்து புது சாதனை படைத்தது. முகமது ஷமி 56 ரன்களும், பும்ரா 34 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷமி மற்றும் பும்ராவின் அதிகபட்ச ஸ்கோர் இதுவேயாகும். பிறகு களமிறங்கிய இங்கிலாந்து, 120 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, 151 ரன்கள் வித்தியாசத்தில் அதகளமான வெற்றியை பதிவு செய்து, தொடரில் 1 - 0 முன்னிலை பெற்றது.

பவுன்ஸ் பந்துகள்
ஷமி - பும்ரா பார்ட்னர்ஷிப்புக்கு முக்கிய காரணம், இங்கிலாந்து வீரர்கள் பும்ராவை கார்னர் செய்தது தான். இதற்கு காரணம், இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஜேம்ஸ் ஆண்டர்சனை குறி வைத்து ஒரு ஓவர் முழுக்க பவுன்ஸ் பந்துகளாக பும்ரா வீசினார். இதனால், கடுப்பான ஆண்டர்சன், களத்திலேயே பும்ராவை நோக்கி சரமாரியாக வார்த்தைகளை அள்ளி வீசினார். பதிலுக்கு இந்திய கேப்டன் விராட் கோலியும் வார்த்தைகளை வீசினார். இந்த மோதல், இந்திய அணி 2ம் இன்னிங்ஸில் பேட்டிங் செய்யயத் தொடங்கியதில் இருந்து மீண்டும் நீடித்தது. கோலி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஆண்டர்சன் நக்கலாக சில வார்த்தைகளை விட, சூடான கோலி, "பும்ராவை போன்று என்னையும் திட்டலாம் என்று பார்க்கிறீர்களா?.. இது ஒன்னும் உன் வீட்டின் கொல்லைப் புறம் கிடையாது, ஜாலியாக இருக்க" என்று பதிலடி கொடுத்தார். அதன் பிறகு, பும்ரா களமிறங்கிய போது, இங்கிலாந்து ரொம்பவே ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒரு பேட்ஸ்மேனுக்கு ஃபீல்ட் செட் செய்வதை விட, பும்ராவுக்கு கடுமையான ஃபீல்ட் செட் செய்தனர். பவுன்சர் பந்துகளை தொடர்ந்து வீசினர். விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் தொடர்ந்து ஸ்லெட்ஜிங் செய்து கொண்டே இருந்தார். பிறகு, மார்க் வுட் வீசிய பந்து, பும்ராவின் ஹெல்மெட்டை மிக பலமாக தாக்கியது. இந்த பந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இந்தியாவும் வெற்றிப் பெற்றது.

நாசர் ஹுசைன்
இந்நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு காரணம் கேப்டன் கோலி - பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோரின் காம்போ தான் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் Daily Mail-ல் எழுதியுள்ள கட்டுரையில், "ஒரு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி, கேப்டன் விராட் கோலியை அவர் விருப்பத்துக்கு செல்ல அனுமதிக்கிறார். கோலி ஆண்டர்சனுடன் வார்த்தைகளை சூடாக பரிமாறிக் கொள்வதைகூட அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. லார்ட்ஸ் டெஸ்டின் 2வது இன்னிங்ஸில், பால்கனியில் நின்று கொண்டு, மோசமான வெளிச்சம் காரணமாக வீரர்களை பேட்டிங் செய்ய வேண்டுமே என்று சொல்லி அழைக்கும் கோலியின் உத்திக்கு அவர் எதுவும் சொல்வதில்லை. இங்கே கேப்டனாக விராட் கோலி அனைத்து பணிகளையும் மேற்கொள்கிறார்.

கோலிக்கு ஆதரவு
இதில் ஆச்சர்யம் என்னவெனில், சீனியர் வீரர்கள் கூட விராட் கோலி ஆதரவாக அவர் பின்னால் நிற்பது தான். கோலி அன்று வெளிச்சமின்மை குறித்து புகார் தெரிவித்த போது, ரோஹித் ஷர்மாவும் கோலி பின்னாடி தான் நின்று கொண்டிருந்தார். கோலியின் இந்த உத்திக்கு அவரும் ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே நடந்து கொண்டார். துணை கேப்டன் ரஹானேவும் கோலிக்கு ஆதரவாக தான் செயல்பட்டார். வெளியில் இருந்து பார்க்கும் போது, ரோஹித் மிக அமைதியான குணாதிசயம் கொண்டவராக தெரியலாம். ஆனால், அவரது ஒரே இலக்கும் வெற்றியை நோக்கி மட்டுமே இருக்கிறது" என்று நாசர் ஹுசைன் எழுதியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











