சென்னை: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடிய தமிழ்நாடு வீரர் நடராஜன், 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஏற்கனவே ஜிம்பாப்வே டி20 தொடர், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றில் நடராஜன் சேர்க்கப்படவில்லை. இவருக்கு பதிலாக கலீல் அஹ்மத் மீது இந்திய அணி நிர்வாகம் முதலீடு செய்து வருகிறது.
இதனால் தமிழக ரசிகர்கள் பலரும் கவுதம் கம்பீரை கடுமையாக விமர்சித்து வந்தனர். தற்போது துலீப் டிராபி தொடருக்கான 4 அணிகளில் விளையாடவுள்ள வீரர்களை பிசிசிஐ அறிவித்துள்ளது. ஒவ்வொரு அணிக்கும் 15 வீரர்கள் என்று மொத்தமாக 60 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதிலும் தமிழ்நாட்டில் இருந்து 6 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

இதுகுறித்து இந்திய சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், துலீப் டிராபி என்பது இந்திய டெஸ்ட் அணிக்கான வீரர்களை தயார் செய்வதற்காக நடத்தப்படுவதாகும். என்னை பொறுத்தவரை தமிழக வீரர் நடராஜன் மிகச்சிறந்த ஒயிட் பால் கிரிக்கெட் வீரர். கடந்த ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்த பவுலிங்கை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் கடைசியாக அவர் முதல்தர போட்டியில் எப்போது பங்கேற்றுள்ளார் என்பதை பார்க்க வேண்டும்.அவர் கடைசியாக 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் தான் விளையாடினார். கடந்த 3 ஆண்டுகளாகவே ரஞ்சி டிராபி, முதல்தர போட்டிகளில் நடராஜன் பங்கேற்கவில்லை. அவர் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்படவிருந்த போது, காயம் ஏற்பட்டது.
நிச்சயம் அவருக்கு நமது ஆதரவு எப்போதும் இருக்கும். எனக்கும் நடராஜனை மிகவும் பிடிக்கும். மிகச்சிறந்த வீரர், மனிதர். ஆனால் ஏதோ சொல்ல வேண்டும் என்று சொல்லக் கூடாது. ஒருவேளை நடராஜன் ரெட் பால் கிரிக்கெட் விளையாடி தமிழ்நாடு அணிக்குள் வந்திருந்தால், நானே நடராஜனுக்காக பேசியிருப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த ரஞ்சி டிராபி தொடரில் நடராஜன் தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் 2021ஆம் ஆண்டு நடராஜன் கால்களில் நடத்தப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின் தற்போது தான் முழு திறனையும் வெளிப்படுத்தி பவுலிங் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.