மொத்தமாக எழுந்து நின்ற வீரர்கள்.. நடராஜன் செய்த சம்பவத்தால்.. டிரெஸ்ஸிங் ரூமில் ஏற்பட்ட பரபரப்பு!
சென்னை: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று குறித்து தமிழக வீரர் நடராஜன் பகிர்ந்து இருக்கிறார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி 20 தொடருக்கான இந்திய அணி நேற்று முதல் நாள் இரவு அறிவிக்கப்பட்டது. நீண்ட நேரம் நடந்த மீட்டிங்கிற்கு பின் இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இந்த அணியில் தமிழக வீரர் நடராஜன் மீண்டும் இணைந்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இவருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் நடராஜன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.

எப்படி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள், டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் மிகவும் சிறப்பாக ஆடினார். இவரின் பவுலிங் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நடராஜன் பேட்டிங்கும் செய்தார்.

வைரல்
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கடைசி டெஸ்டில் பேட்டிங் செய்தது குறித்து நடராஜன் சுவாரசியமான தகவல் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில், கடைசி டெஸ்ட் போட்டியில் நான் பேட்டிங் செய்த போது இந்திய வீரர்கள் எல்லோரும் பதற்றத்தில் இருந்தனர். எனக்கு ஸ்டார்க் பவுலிங் போட்டார்.

ஸ்டார்க்
நான் முதல் பந்தை எதிர்கொண்ட போதே மொத்தமாக டிரெஸ்ஸிங் ரூமில் இருந்த வீரர்கள் எல்லோரும் எழுந்து நின்று பார்த்தனர். நான் எப்படி ஆட போகிறேன் என்று பயத்தோடு நின்று பார்த்துக் கொண்டு இருந்தனர். ஸ்டார்க் என் காலை குறி வைத்து வீசினார்.

பந்தை பார்க்கவில்லை
நானும் பந்தை பார்க்கவே இல்லை. பந்து எப்படி வந்தது என்று கூட எனக்கு தெரியவில்லை. டிரெஸ்ஸிங் ரூம் கொஞ்சம் பதற்றத்தில் இருந்தது. அந்த போட்டிக்கு பின் நான் பேட்டிங் பயிற்சியிலும் கவனம் செலுத்தினேன்.

பேட்டிங்
எனது பேட்டிங்கை மெருகேற்றவும் நான் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறேன், என்று நடராஜன் குறிப்பிட்டுள்ளார் . தற்போது இந்திய அணியில் இணைந்து இருக்கும் நடராஜன் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டிகளில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications