
எப்படி
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் முதலில் நெட் பவுலிங் செய்யவே நடராஜன் தேர்வானார். ஆனால் அதன்பின் வருண் சக்ரவர்த்தி, நவ்தீப் சைனி காயம் காரணமாக டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு பெற்றார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட தமிழக வீரர் நடராஜன் தற்போது மிக முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார்.

என்ன நடந்தது?
இந்த நிலையில் எவ்வளவு உயரம் சென்றாலும் நடராஜனின் இரண்டு குணம் மட்டும் மாறவே இல்லை. முதல் விஷயம் விக்கெட் எடுத்த பின் ஆர்ப்பாட்டம் இன்றி அதை கொண்டாடுவது. எவ்வளவு பெரிய வீரரின் விக்கெட்டை எடுத்தாலும் நடராஜன் தனது முகத்தில் சந்தோசம், கோபம், பெருமிதம் எதையும் காட்டுவது இல்லை. வானத்தை பார்த்து மெல்ல சிரித்துவிட்டு அதை கடந்து சென்றுவிடுகிறார்.

உணர்ச்சி
பவுண்டரி சென்றால் கூட முகத்தில் உணர்ச்சிகளை காட்டுவது இல்லை. ஏன் நேற்று போட்டிக்கு பின் நடராஜனிடம் நேரடியாக கோலி வந்து டி 20 தொடர் கோப்பையை கையில் கொடுத்தார். அப்போதும் கூட அதை பெரிய அளவில் கொண்டாடாமல், முகத்தில் சின்ன சிரிப்போடு கடந்துவிட்டார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூட அவ்வப்போது முகத்தில் உணர்ச்சிகளை காட்டுவார். ஆனால் நடராஜன் அதை காட்டுவதே இல்லை.

என்ன சொன்னார்
இதை பற்றி நடராஜனே நேற்று பேட்டி அளித்தார். அதில், நான் சின்ன வயதில் இருந்து விக்கெட் எடுத்தால் கத்தியது இல்லை. சிரித்துவிட்டு கடந்துவிடுவேன், கிரிக்கெட் ஆட தொடங்கியதில் இருந்தே அப்படித்தான், களத்தில் எனக்கு ஆக்ரோஷமாக நடந்து பழக்கம் இல்லை என்று நடராஜன் பேட்டி அளித்துள்ளார். நடராஜன் தனித்து தெரிய இன்னொரு காரணம் என்று பார்த்தால் அது அவரின் பணிவுதான்.

களம்
களத்திலும், களத்திற்கு வெளியிலும் நடராஜன் மிகவும் பணிவுடன் காணப்படுகிறார். நேற்று பேட்டி அளித்த போது கூட முன்னாள் வீரர் முரளி விஜயை சொல்லுங்க அண்ணா என்று தமிழில் பணிவுடன் குறிப்பிட்டார்.ராகுல், பாண்டியா, கோலி கொடுக்கும் அறிவுரைகளை கேட்டு அப்படியே பவுலிங் செய்கிறார். இதெல்லாம் போக பாண்டியாவிடம் மிகவும் நெருக்கமாக நட்பாக பழகி வருகிறார்.

நட்பு
அணியில் வேகமாக உயர்ந்துவிட்டோம் என்ற எந்த ஈகோவும் இன்றி மிக பணிவுடன் பேசுகிறார். இதைத்தான் கேப்டன் கோலியும், நடராஜனின் பணிவு மிகவும் பிடித்து இருக்கிறது என்று கூறியுள்ளார். அதோடு, நடராஜன் எளிமையாக இருக்கிறார். அவரின் எளிமையை பார்க்க சந்தோசமாக இருக்கிறது என்று ஹர்திக் பாண்டியாவும் குறிப்பிட்டு இருந்தார்.
ஐபிஎல் முதல் ஆஸ்திரேலிய தொடர் வரை அனைத்திலும் இவர் தனித்து தெரிந்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் வருடத்தின் மிக முக்கியமான நியூஸ் மேக்கர்களில் ஒருவராக நடராஜன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொண்டாட்டம்
பொதுவாக வளர்ச்சி வரும் போது கூடவே திமிரும் வரும். ஆனால் நடராஜன் ஐபிஎல் தொடரில் சாதித்து, இந்திய அணிக்குள் வந்து கோலிக்கு நெருக்கமான பின்பும் கூட.. எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க, என்னால் முடிந்த பெஸ்டை கொடுத்தேன் என்று பேட்டி அளித்துள்ளார். அவரின் இந்த குணம்தான் அணியில் அவர் தனித்து தெரிய முக்கிய காரணமாக மாறியுள்ளது.


Click it and Unblock the Notifications