பரோடா: டி20 உலகக்கோப்பை தொடரை 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் கடைசி ஓவரில் 16 ரன்களை டிஃபெண்ட் செய்த ஹர்திக் பாண்டியா, இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இதனால் நாடு திரும்பிய போது, ஹர்திக் பாண்டியாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மும்பையில் நடந்த வெற்றிப் பேரணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின் வான்கடே மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது, இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை வெகுவாக பாராட்டினார். அப்போது வான்கடே மைதானமே ”ஹர்திக்.. ஹர்திக்” என்று கோஷத்தால் அதிர்ந்தது.

இதனால் நெகிழ்ச்சியடைந்த ஹர்திக் பாண்டியா, எழுந்து நின்று ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். 2 மாதங்களுக்கு முன்பாக இதே வான்கடே மைதானத்தில் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை கடுமையாக விமர்சித்த நிலையில், தற்போது அதே மைதானத்தில் ரசிகர்களின் அன்பை ஹர்திக் பாண்டியா பெற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின் இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்களின் குடும்பத்தினரை சந்திக்க புறப்பட்டனர். மும்பை வீரர்கள் தங்களின் காரில் வீட்டிற்கு புறப்பட்ட நிலையில், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இன்று தான் வீட்டிற்கு சென்று குடும்பத்தினரை சந்தித்தனர். அந்த வகையில் ஹர்திக் பாண்டியா தனது குடும்பத்தினர் இருக்கும் பரோடாவில் தரையிறங்கினார்.
அங்கு சகோதரர் க்ருணால் பாண்டியா, அவரது அம்மா நளினி மற்றும் க்ருனால் பாண்டியாவின் மனைவி பங்குரி சர்மா மற்றும் அவரது மகன் அகஸ்தியா ஆகியோரை சந்தித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவுக்கு அவரது குடும்பத்தினர் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தனர். பலூன்களை கட்டி பட்டாசுகளை வெடித்து வரவேற்பு கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் குடும்பத்தினருடனான புகைப்படங்களை ஹர்திக் பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்கள், வீடியோகளை பதிவிட்ட ஹர்திக், ” எனது நம்பர் 1.. உனக்காக எல்லாவற்றையும் செய்வேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில மாதங்களாக மனைவி நடாஷாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹர்திக் பாண்டியா விவாகரத்து செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியது. தற்போது டி20 உலகக்கோப்பையை வென்று திரும்பிய போதும், ஹர்திக் பாண்டியாவை பார்க்க நடாஷா வராதது பல்வேறு குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. இருப்பினும் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் பின்தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.