பிரபல தமிழக கபடி வீராங்கனை தற்கொலை.. தேசிய அளவில் சாதித்தவர்.. காரணம் குறித்து போலீஸ் விசாரணை
சென்னை: சென்னையை அடுத்த மாங்காட்டில் வசித்து வரும் பிரபல கபடி வீராங்கனை பானுமதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
25 வயதான பானுமதியின் தந்தை காய்கறி விற்பனை செய்து வருபவர். படிக்கும் போதே கபடி மீது இருந்த ஆர்வத்தால் பல்வேறு போட்டிகளில் விளையாடினார்.
இதன் மூலம் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் முன்னேறி, அசத்தியவர் தான் பானுமதி.

தற்கொலை
பானுமதி கடந்த சில நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில், வீட்டில் பானுமதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட அவரது பெற்றோர், பானுமதியை மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் பானுமதி உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

செல்போன்
தகவல் அறிந்து வந்த போலீசார் பானுமதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். பானுமதியின் செல்போனை மீட்ட போலீசார் அவர் கடைசியாக யாருக்கு பேசினார், யாருடன் தொடர்பு கொண்டார். இல்லை காதல் விவகாரமா என்பது குறித்து விசாரித்து வந்தனர்.

வேலை இல்லை
இந்த நிலையில், குடும்பத்தின் கஷ்டம் காரணமாக கபடியில் சாதித்தால் அவரது வாழ்க்கை மாறும், அரசு வேலை கிடைக்கும் என்று பானுமதி கடுமையாக முயற்சித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்த அரசு வேலை மட்டும் கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பானுமதி, குடும்பத்திற்கு உதவி செய்ய முடியவில்லை என்ற துக்கத்தில் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

கோரிக்கை
கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் மூலம் கோடி கோடியாக பணம் கொட்டும் நிலையில் மற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ஒரு அரசு வேலை கூட கிடைப்பதில்லை. இதனால் பல்வேறு விளையாட்டு வீரர்கள் மீது அக்கறை செலுத்தி, அவர்களுக்கு அரசு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று பல்வேறு விளையாட்டு நிபுணர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications