பெங்களூர்: மருத்துவ பரிசோதனையில் 6 இந்திய தடகள வீரர்-வீராங்கனைகள் ஊக்கமருந்து உட்கொண்டது தெரிய வந்துள்ளது. இது உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்துள்ளது.
நேற்று தான் ஆசிய விளையாட்டில் தங்கம் வென்ற மந்தீப் கௌர் மற்றும் ஜூவானா மர்மு ஆகிய 2 தடகள வீராங்கனைகள் ஊக்கமருந்து உட்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையி்ல் பெங்களூரில் கடந்த மாத துவக்கத்தில் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தடகள போட்டிகளில் கலந்து கொண்டவர்களில் 4 வீரர்-வீராங்கனைகள் ஊக்கமருந்து உட்கொண்டது தெரிய வந்துள்ளது.
ஜூவானா மர்மு, சினி ஜோஸ், மந்தீப் கௌர், நீளம் தாண்டும் வீரர் ஹரி கிருஷ்ணன், குண்டு எரிதல் வீராங்கனை சோனியா, ஓட்டப்பந்தய வீராங்கனை டியானா மேரி தாமஸ் ஆகியோர் ஊக்க மருந்து உட்கொண்டனர் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த வீரர்-வீராங்கனைகளின் சிறுநீர் மாதிரி எடுத்து அவர்கள் ஊக்க மருந்து உட்கொண்டனரா என்று சோதிக்கப்பட்டது. அதில் 6 பேரும் ஊக்கமருந்து உட்கொண்டிருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் சஸ்பெண்ட செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் ஜூன் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை மாநிலங்களுக்கு இடையேயான தடகள போட்டிகள் நடந்தது. அதில் கலந்து கொண்ட ஜூவானா, ஜோஸ், சோனியா, ஹரி கிருஷ்ணன் மற்றும் மேரி ஆகியோரின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில் ஜூவானா, ஜோஸ், சோனியா மற்றும் ஹரி கிருஷ்ணன் தடைசெய்யப்பட்ட மருந்தை ஊட்கொண்டதும், டியானா மேரி தாமஸ் எபிமெதனிடால் என்னும் ஊக்க மருந்தை உட்கொண்டதும் தெரிய வந்தது.
ஏற்கனவே கடந்த மாதம் பாட்டியாலாவில் பரிசோதிக்கப்பட்ட போதும் ஜூவானா ஊக்க மருந்து எடு்துதக் கொண்டது தெரிய வந்தது. தற்போது இரண்டாவது முறையாகவும் பரிசோதனையில் சிக்கியுள்ளார்.
நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்திய இந்த 6 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.