
அசத்தல்
கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் சன் ரைசரஸ் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக பந்துவீசிய தமிழகத்தை சேர்ந்த டி.நடராஜன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அறிமுகமானார். முன்னணி வீரர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்ததால் வலைப்பயிற்சி பவுலராக சென்ற நடராஜனுக்கு இந்த டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டது. இதனை மிகச்சிறப்பாக பயன்படுத்திக்கொண்ட நடராஜன் அனைவரது கவனத்தையும் பெற்றார்.

இளம் வீரர்கள்
நடராஜனை போல ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர்கள் முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், சுப்மன் கில், நவ்தீப் சைனி, ஷர்துல் தாக்கூர் ஆகியோர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி வெற்றி பெற பெரும் உதவியாக இருந்தனர். இதனால் இவர்களுக்கு அடுத்தடுத்த தொடர்களில் தற்போது வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

மஹிந்திரா
இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான ஆனந்த் மஹிந்திரா கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இதனால் ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்பட்ட அந்த 6 அறிமுக வீரர்களையும் ஊக்கப்படுத்தும் வகையில் கார் பரிசாக வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் சொன்னபடி நடரஜானுக்கு தற்போது மஹிந்திராவின் புதிய தார் எஸ்.யு.வி கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

நன்றி மறக்காத நடராஜன்
இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்த நிலையில், தனக்கு மஹிந்திரா நிறுவனம் பரிசளித்த காரை தனது பயிற்சியாளரும் நலம் விரும்பியுமான ஜெயபிரகாஷ் என்பவருக்கு பரிசாக வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை ஜெயப்ரகாஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் நடராஜன் மீண்டும் மக்கள் மனதை வென்றுவிட்டதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











