டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடிக்க உள்நாட்டுப் போட்டிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், "ஐபிஎல் தொடரில் சிறப்பாகச் செயல்பட்டால் மட்டுமே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியும், அதுதான் நிதர்சனம்" என்று இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனி கூறி இருக்கிறார். அஜித் அகர்கர் மாற்றும் கம்பீர் சொல்வது ஒன்று, செய்வது ஒன்று என்பதை சூசகமாக சுட்டிக்காட்டி இருக்கிறார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, பிசிசிஐ நிர்வாகம் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. தேசிய அணிக்கு விளையாடாத சமயங்களில், பிசிசிஐ ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளைத் தவிர்த்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று முன்னாள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா எச்சரிக்கை விடுத்திருந்தார். இதன் விளைவாக, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் கூட, கடந்த சீசனில் ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்றனர்.

தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஆகியோரும் இந்த நிலைப்பாட்டை வலுவாக ஆதரித்து வருகின்றனர். அனைத்து வடிவ போட்டிகளிலும் தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உள்நாட்டுப் போட்டிகள் மற்றும் இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடுவது அவசியம் என்று வீரர்களுக்கு அவர்கள் தொடர்ந்து நினைவூட்டி வருகின்றனர்.
இந்நிலையில், பிசிசிஐயின் இந்த நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தை நவ்தீப் சைனி முன்வைத்துள்ளார். ஹிமாச்சலப் பிரதேசத்திற்கு எதிராக டெல்லி அணிக்காக ரஞ்சி டிராபி போட்டியில் விளையாடி 9 ஓவர்களில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு, பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசியதாவது:
"ஒருவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், இந்தியாவிற்காக விளையாட வேண்டுமென்றால், நீங்கள் ஐபிஎல்-இல் சிறப்பாகச் செயல்பட்டாக வேண்டும். இதுதான் நிதர்சனம். ஒரு வருடத்திற்கு முன்பு, எனக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டு எனது பந்துவீச்சின் வேகம் குறைந்தது. அதன் காரணமாக நான் ஐபிஎல் ஒப்பந்தத்தையே இழந்தேன்" என்று நவ்தீப் சைனி வெளிப்படையாகப் பேசினார்.
ஒரு காலத்தில் இந்திய வேகப்பந்து வீச்சின் எதிர்காலமாக நவ்தீப் சைனி கருதப்பட்டார். குறிப்பாக, 2020-21 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அவரும் முக்கிய காரணமாக இருந்தார். அந்தத் தொடரில் 2 போட்டிகளில் விளையாடி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பிறகு ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் தனது இடத்தை இழந்தார்.
இந்திய அணியில் மீண்டும் இடம்பிடிக்கும் வாய்ப்பு குறைந்துவிட்ட போதிலும், தனது கனவைக் கைவிடவில்லை சைனி. இது பற்றி பேசுகையில், "ஏன் முடியாது? இன்னும் ஓரிரு போட்டிகளில் ஐந்து விக்கெட்டுகளை (ஃபைஃபர்) வீழ்த்தினால், மீண்டும் நான் தேர்வாளர்களின் கவனத்திற்கு வருவேன். இந்திய அணிக்குத் திரும்ப வேண்டும் என்ற கனவு எனக்கில்லையென்றால், டெல்லி அணியில் இடம்பிடித்திருக்கவே எனக்குத் தகுதியில்லை" என்று அவர் கூறினார்.