ராஜ்காட் : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆர்சிபி அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி உடன் மோதலில் ஈடுபட்ட ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு சோகமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
24 வயது ஆன நவீன் உல் ஹக், இதுவரை 7 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதைப் போன்று 27 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 34 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார்.

நவீன் உல் ஹக், உலகம் முழுவதும் பல்வேறு கிரிக்கெட் தொடர்களில் தற்போது விளையாடுவதற்கு கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் டி20 போட்டியில் விளையாடுவதற்காக ஏற்கனவே ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நவீன் உல் ஹக், தற்போது இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆர்வம் காட்டினார்.
இதனை அடுத்து ஆப்கானிஸ்தான் அணியில் நவீன் உல் ஹக் சேர்க்கப்பட்டார். நவீன் உல் ஹக்கின் இந்த முடிவுக்கு காரணம் ஐபிஎல் தொடரில் அடைந்த அவமானத்திற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்தியாவுக்கு அவர் வந்திருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
இந்த நிலையில் நவீன் உல் ஹக்கின் உடல்நலம் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு ஒத்துழைப்பு தராததால் தற்போது மீண்டும் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதே தமக்கு கடைசி ஒரு நாள் போட்டிகளாக இருக்கும் என்றும் நவீன் உல் ஹக் கூறியுள்ளார். 24 வயதில் தமக்கு ஒரு நாள் கிரிக்கெட் போட்டி வேண்டாம், வெறும் டி20 போட்டி தான் வேண்டும் என நவீன் உல் ஹக் எடுத்த முடிவு ஆப்கானிஸ்தான் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விராட் கோலி மற்றும் இந்திய ரசிகர்களை பழிவாங்க தான் தற்போது 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு நவீன் வந்திருக்கிறாரா என்று ரசிகர்களும் கேள்வி கேட்டு வருகிறார்கள். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஓய்வு பெற்று விட்டு மீண்டும் விளையாட போகிறேன் என அறிவித்து மீண்டும் ஓய்வு முடிவை நவீன் உல் ஹக் எடுத்திருப்பது சிறுபிள்ளைத்தனமான முடிவு என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.