டெல்லி : கிரிக்கெட் உலகில் மிகவும் கவனத்தை ஈர்த்த சண்டைகளில் ஒன்றாக அமைந்திருந்தது விராட் கோலிக்கும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக்கிற்கும் ஏற்பட்ட மோதல்தான்.
இந்த மோதல் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் ஐபிஎல் போட்டியின் போது தொடங்கியது. அதன் பிறகு இந்த மோதல் பல்வேறு வடிவங்களை சந்தித்தது. கிரிக்கெட் களத்தில் இருந்து சமூக வலைத்தளக் களத்திற்கு சென்ற இந்த மோதல் காரணமாக நவீன் உல் ஹக் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் வில்லனாக மாறினார்.

விராட் கோலி பெயரை நவீன் உல் ஹக் எங்கு சென்றாலும் ஆறு மாதத்திற்கு கேட்கும் வகையில் மாறியது. இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற நவீன் உல் ஹக், மீண்டும் உலக கோப்பை போட்டியில் பங்கேற்க திரும்பினார். விராட் கோலியை பழி வாங்குவதற்காக தான் நவீன் உல் ஹக் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு வந்திருப்பதாக விமர்சகர்களும் கருதினர்.
இதனால் உலககோப்பை ஆட்டத்தில் இருவரும் மோதிக் கொள்ளும்போது மீண்டும் பெரிய சண்டை வெடிக்கும் என்றும் களத்தில் காரசாரமான விவாதங்கள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்ததோ அப்படியே தலைகீழ் தான். இருவரும் பேசிக்கொண்டு கையை குலுக்கிக்கொண்டு கட்டி அணைத்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இதனைப் பார்த்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது சண்டையை எதிர்பார்த்த வந்தவர்களுக்கு சமாதானம் மட்டுமே கிடைத்தது. இந்த நிலையில் விராட் கோலி இடம் அப்படி என்ன பேசினீர்கள்? விராட் கோலி அதற்கு பதில் என்ன சொன்னார் எவ்வாறு இந்த சண்டை முடிந்தது என்பது குறித்து நவீன் உல் ஹக் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
அதில் களத்தில் என்ன நடக்கிறதோ அது களத்திற்குள் மட்டும் தான் இருக்க வேண்டும். மற்றபடி வெளியே எங்களுக்குள் எந்த பிரச்சனையும் கிடையாது. நான் விராட் கோலியிடம் நேராக கைக்குலுக்க சென்றேன். விராட் கோலி என் கையை குலுக்கி விட்டு நமக்குள் இருக்கும் மோதலை இப்போதே முடித்துக் கொள்வோம் என்று கூறினார். அதற்கு நானும் சிரித்துக் கொண்டு நாம் இருவரும் சேர்ந்து முடித்துக் கொள்வோம் என்று கூறி கையை குலுக்கினேன். அதன்பிறகு இருவரும் கட்டி அணைத்துக் கொண்டு எங்களுடைய அன்பை பரிமாறிக் கொண்டோம் என்று நவீன் உல் ஹக் கூறினார்.