டெல்லி: பாகிஸ்தானில் நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்று, அந்த நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க இம்ரான் கான் காத்திருக்கிறார். இந்த நிலையில், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்பது பலருக்கும் தெரியாத செய்தியாக இருக்கும்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு நடந்த தேர்தலில் இம்ரான் கானின் கட்சி அதிக இடங்களில் வென்றுள்ளது. பெரும்பான்மையை எட்ட உள்ளது. நாட்டின் அடுத்த பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. ஊழல் வழக்கில் சிறையில் உள்ள நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்- நவாஸ் கட்சி ஆட்சியில் இருந்து வெளியேறுகிறது.

முன்னாள் கிரி்க்கெட் வீரரான இம்ரான் கான், பாகிஸ்தான் அணிக்காக 88 டெஸ்ட்களில் 3807 ரன்கள் எடுத்துள்ளார். 175 ஒருதினப் போட்டிகளில் 3709 ரன்கள் எடுத்துள்ளார். மிகச் சிறந்த ஆல்ரவுண்டரான இம்ரான் கான், டெஸ்ட் போட்டிகளில் 362 விக்கெட்களும், ஒருதினப் போட்டிகளில் 182 விக்கெட்களும் எடுத்துள்ளார். 1992ல் பாகிஸ்தானுக்கு உலகக் கோப்பையை வென்று தந்தவர்.
இம்ரான் கானின் சாதனைகள் உலகம் அறிந்தவை. அதே நேரத்தில் பாகிஸ்தானின் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப்பும் கிரிக்கெட் விளையாடியுள்ளார் என்பது பலரும் அறியாத செய்தியாகும்.
1973-74ல் பாகிஸ்தானில் நடந்த முதல்தர கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஏர்லைன்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ரயில்வே அணிக்காக விளையாடினார் ஷெரீப். அந்த ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடிய ஷெரீப், அந்த ஆட்டத்தில் டக் அவுட்டானார்.
இதனிடையில் 1987ல், வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் விளையாடியது. அப்போது பஞ்சாப் முதலமைச்சர் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியது. அப்போது பஞ்சாப் மாகாண முதல்வராக இருந்த நவாஸ் ஷெரீப் கேப்டனாக களமிறங்கினார். வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களுக்கு எதிராக சரியாக பேடிங் செய்யாமல் அவர் களமிறங்கியபோது பயந்து போனேன் என்று, இம்ரான் கான் தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.