தரம்சாலா: உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்காகவே தாங்கள் இந்தியா வந்திருப்பதாக நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

நெதர்லாந்து கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயம் நேற்று தொடங்கியுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் ஜிம்பாப்வே மற்றும் ஸ்காட்லாந்து அணிகளை மட்டுமே வீழ்த்தியிருந்த நெதர்லாந்து அணி, நேற்றைய ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இதன் மூலமாக நடப்பு உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியையும் பெற்றுள்ளது.
மழை காரணமாக நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய நெதர்லாந்து அணி 43 ஓவர்களில் 245 ரன்களை விளாசியது. 82 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறிய போதும், கேப்டன் எட்வர்ட்ஸ் அபாரமாக விளையாடி 78 ரன்கள் சேர்த்தார். இவருக்கு துணையாக கடைசி நேரத்தில் ஆர்யன் தத் 9 பந்துகளில் 23 ரன்கள் விளாசினார்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 207 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் நெதர்லாந்து அணியிடம் தோல்வியடைந்ததால் அரையிறுதி வாய்ப்பை தென்னாப்பிரிக்கா இழந்தது. தற்போது உலகக்கோப்பை தொடரிலும் தென்னாப்பிரிக்கா அணியை மீண்டும் வீழ்த்தியுள்ளது நெதர்லாந்து அணி.
இதுகுறித்து நெதர்லாந்து அணி கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் பேசுகையில், எங்கள் அணியை நினைத்து பெருமையாக உள்ளது. எங்கள் அணியிலும் மிகச்சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் சில வெற்றிகளை பெறுவோம் என்று நம்பிக்கை உள்ளது. நிச்சயம் இந்த வெற்றிக்கு முன் ஏராளமான தகவல்களையும், சோதனைகளையும் செய்தோம். சில வீரர்களுக்கு எதிராக சரியான போட்டியை அளித்தோம்.

முதல் சில போட்டிகளில் நாங்கள் நல்ல நிலையில் இருந்து, பின்னர் சரிந்தோம். ஏராளமான ரசிகர்கள் கடைசி வரை இருந்து எங்கள் வெற்றியை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஊரை சுற்றி பார்ப்பதற்காக நாங்கள் உலகக்கோப்பையில் பங்கேற்கவில்லை. அரையிறுதி சுற்றில் விளையாட வேண்டும் என்ற கனவுகளுடன் வந்திருக்கிறோம். அந்த கனவுகளை எட்டுவதற்கு அனைத்து அணிகளையும் வீழ்த்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.