மும்பை: ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இருந்து நட்சத்திர தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து கோபமடைந்த பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நானே ஒரு இடைவெளிக்காக காத்திருந்தேன்.. நன்றி என்று பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
7 மாதங்களுக்கு முன்பாக இந்திய அணி நட்சத்திர வீரர்களான ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் இருவரும் பிசிசிஐ நிர்வாகத்தை பகைத்து கொண்டனர். தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் இருவரையும் ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுமாறு அறிவுறுத்திய போது, இருவருமே அதனை ஏற்காமல் சொந்த விஷயங்களை பார்க்க தொடங்கினர்.

இதனால் டென்ஷனான அஜித் அகர்கர், இருவரையும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்தும் உடனடியாக நீக்கினார். இதுவரை இஷான் கிஷன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் இந்திய டெஸ்ட் அணி பக்கமே வர முடியாமல் உள்ளனர். ஆனால் தற்போது ஃபார்மில் இல்லாததால், இனி இந்திய அணிக்கு திரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த விவகாரம் மூலமாக பிசிசிஐ நிர்வாகத்தை வீரர்கள் பகைத்து கொள்ள கூடாது என்று இந்திய அணி வீரர்களுக்கு மறைமுகமாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான பிரித்வி ஷா, மும்பை அணி நிர்வாகத்துடன் மோதலில் ஈடுபட்டுள்ளார். ரஞ்சி டிராபி தொடரில் திரிப்புரா அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி களமிறங்கவுள்ளது.
இந்த நிலையில் மும்பை அணியில் இருந்து தொடக்க வீரர் பிரித்வி ஷா அதிரடியாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பேட்டிங் பயிற்சிக்கு ஒழுங்காக வருவதில்லை, வலைப்பயிற்சியை தொடர்ச்சியாக மிஸ் செய்வது, ஃபிட்னஸில் கவனம் செலுத்துவதில்லை, களத்திற்கு வெளியில் ஒழுங்கீனமாக இருப்பது என்று ஏராளமான புகார்களால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்தது.
இதனால் குறைந்தது 2 வாரங்கள் வரை அவரால் ரஞ்சி டிராபி தொடரில் விளையாட முடியாது என்று பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அந்த 2 வாரங்களும் மும்பை அணியின் ஃபிட்னஸ் பயிற்சியாளருடன் பணியாற்றி உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஏற்கனவே ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா, தற்போது ரஞ்சி அணியில் இருந்தும் நீக்கப்பட்டிருப்பது அவரது எதிர்காலம் குறித்த கேள்வியை எழுப்பியது. ஆனால் இதனை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத பிரித்வி ஷா, "நானே கிரிக்கெட்டில் இருந்து பிரேக் எடுக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.. நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
இது சர்ச்சையான நிலையில், உடனடியாக இன்ஸ்டாகிராம் பதிவை அழித்துள்ளார். இதனால் மும்பை அணி நிர்வாகத்துடன் பிரித்வி ஷா நேரடி மோதலில் ஈடுபட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் இனி மும்பை அணிக்குள் பிரித்வி ஷா மீண்டும் வருவதும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.