மும்பை: இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனக்கு திருமணம் நடந்ததை சமூக வலைதளங்களில் அறிவித்தார். இந்தியாவுக்காக ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று கொடுத்தவர் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. அவரது திருமணம் மிகவும் ரகசியமாக, குடும்பத்தினர் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்வாக நடந்து முடிந்து இருக்கிறது.
இது பற்றி எந்த செய்தியும் ஊடகங்களில் வெளியாகாத நிலையில், அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் திருமண நிகழ்வின் புகைப்படங்களை வெளியிட்டார். இது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

ஹிமானி என்ற பெண்ணை அவர் திருமணம் செய்து இருக்கிறார். இந்திய அணியின் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையான பெயரையும், புகழையும் பெற்று இருக்கும் நீரஜ் சோப்ராவின் திருமண நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்து உள்ளது.

இந்த திருமணம் குறித்து நீரஜ் சோப்ராவின் மாமாவிடம் விசாரித்த போது, இந்த திருமணம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்ததாக குறிப்பிட்டார். நீரஜின் மனைவி ஹிமானி ஹரியானா மாநிலம் பானிபட்டை சேர்ந்தவர் என்றும், அவர் அமெரிக்காவில் படித்தவர் என்றும் கூறப்படுகிறது.
ஹிமானி டென்னிஸ் வீராங்கனையாக இருந்தவர் என்பதோடு அவர் விளையாட்டு மேலாண்மை குறித்த இளங்கலை படிப்பை படித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர் தற்போது அமெரிக்காவில் டென்னிஸ் விளையாட்டு மேலாண்மை சார்ந்த பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் மெக்கார்மேக் ஐசென்பெர்க் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட்டில் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்மினிஸ்ட்ரேஷன் என்ற கல்வி நிலையத்தில் முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.
அவர் எந்த பகட்டும், விளம்பரமும், பிரம்மாண்டமும் இல்லாமல் குடும்பத்தினர் மத்தியில் திருமணம் செய்து கொண்டதை பலரும் பாராட்டி வருகின்றனர். திருமணத்தை கூட பணமாக மாற்றும் பிரபலங்களுக்கு மத்தியில், அதை பாரம்பரியம் மாறாத குடும்ப நிகழ்வாக நடத்தியதை பலரும் சுட்டிக் காட்டி உள்ளனர்.
நீரஜ் சோப்ரா 2021 ஒலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். 2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார்.