துபாய்: துபாயில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவை அவமதித்துப் பேசிய அமெரிக்க வீரரை, இந்திய வீரர் நீரஜ் கோயத் ரிங்கில் அடித்துத் துவம்சம் செய்தார். ஆனால் போட்டி முடிந்த பிறகு, டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துபாயில் 'மிஸ்ஃபிட்ஸ் பாக்சிங்' தொடர் நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிரபல குத்துச்சண்டை வீரர் நீரஜ் கோயத், அமெரிக்காவின் அந்தோணி டைலரை எதிர்கொண்டார். இந்தப் போட்டிக்கு முன்னதாகவே அந்தோணி டைலர், இந்தியாவைப் பற்றியும், இந்திய குத்துச்சண்டை விளையாட்டின் தரம் குறித்தும் மிகவும் ஏளனமாகப் பேசியிருந்தார். இது இந்திய ரசிகர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

வாய்ப்பேச்சில் வீரத்தைக் காட்டிய அந்தோணி டைலரை, ரிங்கிற்குள் நுழைந்ததும் நீரஜ் கோயத் பந்தாடினார். 6 சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டியில், நீரஜ் கோயத் தனது அதிரடி குத்துக்களால் அந்தோணியை திணறடித்தார். இறுதியில் நடுவர்கள் ஒருமித்த கருத்துடன் நீரஜ் கோயத் வெற்றி பெற்றதாக அறிவித்தனர்.
போட்டி முடிந்த பிறகு தான் மற்றொரு மோதல் அரங்கேறியது. மருத்துவ அறையில் இருந்த நீரஜ் கோயத்திடம், தோல்வியடைந்த அந்தோணி டைலர் கைகுலுக்கச் சென்றார். ஆனால், இந்தியாவை இழிவுபடுத்திய கோபத்தில் இருந்த நீரஜ், கைகுலுக்க மறுத்துவிட்டார். "உனக்கு பாக்சிங் பற்றி என்ன தெரியும்? நீ பேசுவதெல்லாம் பைத்தியக்காரத்தனம்" என நீரஜ் முகத்திற்கு நேராகச் சொன்னார்.
இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்க வீரர் அந்தோணி, கையில் வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை நீரஜ் மீது வீசினார். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டினார். உடனே அங்கிருந்த பாதுகாவலர்கள் இருவரையும் விலக்கி, அந்தோணியை வெளியேற்றினர்.
இந்தச் சம்பவம் குறித்து பின்னர் பேசிய நீரஜ் கோயத், "இந்த அமெரிக்க ஆள் என்னை மிகவும் குறைத்து மதிப்பிட்டான். இந்தியர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். நான் முன்பே சொன்னது போல, 'இந்தியா தான் உங்கள் அப்பா'. இந்தியர்கள் சொன்னதைச் செய்து காட்டுவார்கள்" என ஆவேசமாகத் தெரிவித்தார். வெற்றியை விட, இந்தியாவைத் தவறாகப் பேசியவருக்கு நீரஜ் கொடுத்த இந்தத் தரமான பதிலடி இணையத்தில் பரவி வருகிறது.