டெல்லி: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று டி-20 போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 38 வயதாகும் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் அஷ்விண், ரவீந்திர ஜடேஜா புறக்கணிக்கப்பட்டனர்.ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிரான ஒருதினப் போட்டித் தொடரை 4-1 என இந்தியா வென்றுள்ளது. அடுத்ததாக, 3 டி-20 போட்டிகள் நடக்க உள்ளன. வரும் 7ம் தேதி ராஞ்சியிலும், 10ம் தேதி குவஹாத்தியிலும், 13ம் தேதி ஐதராபாத்திலும் டி-20 போட்டிகள் நடக்கின்றன.இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 38 வயதாகும் வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஷ் நெஹ்ராவுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை 25 டி-20 போட்டிகளில், 34 விக்கெட்களை வீழ்த்தியுள்ளது ஆஷிஷ் நெஹ்ராவை தேர்வு செய்வதற்கு காரணமாக அமைந்துள்ளது.மனைவிக்கு உடல்நிலை சரியில்லாததால், ஒருதினப் போட்டித் தொடரில் விளையாடாத ஷிகார் தவான், அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஒருதினப் போட்டித் தொடரில் நான்கு அரை சதங்கள் அடித்திருந்தாலும், டி-20க்கு சரிபட்டு வரமாட்டார் என்று ரஹானேவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.சீனியர் வீரர்களான அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவின் பெயர்கள் பரிசீனைக்கே எடுத்துக் கொள்ளப்படவில்லை. டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட்களான உமேஷ் யாதவ், முகமது ஷமி ஆகியோரும் அணிக்கு பரிசீலிக்கப்படவில்லை.விக்கெட் கீப்பிங் செய்வதற்கு தலை டோணி உள்ளார். இருந்தாலும் மாற்று விக்கெட் கீப்பராக அனுபவமுள்ள தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார்.டி-20 தொடருக்கான இந்திய அணிவிராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகார் தவான், கே.எல். ராகுல், கேதார் ஜாதவ், ஹார்திக் பாண்டயா, மனீஷ் பாண்டே, டோணி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, ஆஷிஷ் நெஹ்ரா, தினேஷ் கார்த்திக், அக்சர் படேல்.