டெல்லி: இந்தியாவின் முக்கிய வேகப்பந்து பவுலர்களில் ஒருவரான நெஹ்ரா இந்திய அணியில் இருந்து ஒய்வு பெற்றுள்ளார். தற்போது டெல்லியில் நடக்கும் டி-20 போட்டியில் அவர் விளையாடினார். அவர் விளையாடுவது சந்தேகமாக இருந்த சூழ்நிலையில் கடைசியாக இந்திய அணியின் பிளெயிங் லெவன் பட்டியலில் இடம்பிடித்தார்.
இன்று நியூசிலாந்துவுடன் தற்போது டெல்லியில் நடந்த டி-20 போட்டியே இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான பவுலர்களில் ஒருவரான நெஹ்ராவின் கடைசி ஆட்டம் ஆகும். இந்த போட்டியில் இருந்து அவர் அனைத்து விதமான ஐசிசி போட்டிகளில் இருந்தும் விடைபெற்றார். இந்த கடைசி போட்டியில் அவர் இந்திய கேப்டன் கோஹ்லியின் தலைமையின் கீழ் அவரது சொந்த மண்ணான டெல்லியில் விளையாடினார்.
இந்த நிலையில் இவர் நேற்று நடந்த பயிற்சியில் ஈடுபடாமல் 15 நிமிடத்தில் அனைவரிடமும் பேசிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நெஹ்ராவின் கடைசி மேட்ச்சில் அவர் விளையாடுவது சந்தேகமாக இருந்து வந்தது. அவர் பிளேயிங் லெவனில் விளையாடுவாரா என்பது இன்னும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது விளையாடும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அவர் கடைசியாக இடம் பிடித்தார் .
இந்திய அணி இதன் மூலம் 6 பவுலர்களுடன் களம் இறங்கியது. அதேபோல் இவருடன் புதிதாக ஷ்ரேயஸ் ஐயரும் அணியில் இடம்பிடித்தார். இந்த போட்டியின் மூலம் நெஹ்ராவின் 18 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து இருக்கிறது. இவர் தனது முதல் முதலாக இலங்கைக்கு எதிராக கொழும்பில் 1999 பிப்ரவரி 24 நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
மிகவும் சிறப்பாக விளையாடிய நெஹ்ரா தனது கடைசி போட்டியில் 4 ஓவர்கள் போட்டு 29 ரன்கள் கொடுத்தார். கடைசி ஓவர் போட இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. நெஹ்ராவை கோஹ்லியும், தவானும் தோளில் சுமந்து சென்றனர். நெஹ்ராவின் டெல்லி மண் அவருக்கு ஆரவாரமாக விடை கொடுத்தது.