சேலம்: மதுரை அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் நெல்லை அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்று, குவாலிஃபயர் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று எலிமினேட்டர் சுற்று நடைபெற்றது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ் - மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி குவாலிஃபயர் 2 சுற்றில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொள்ளும். இந்த நிலையில் டாஸ் வென்ற மதுரை அணி கேப்டன் ஹரி நிஷாந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய நெல்லை அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் அஜிதேஷ் குருசாமி 30 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்த, இன்னொரு பக்கம் நிதிஷ் ராஜகோபால் 50 பந்துகளில் 76 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதுமட்டுமல்லாமல் கடைசி நேரத்தில் வந்த ரிதிக் ஈஸ்வரன் 10 பந்துகளில் 2 சிக்சர், 3 பவுண்டரி விளாசி 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் நெல்லை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் குவித்தது.
மதுரை அணி வெற்றிபெற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், சுரேஷ் - ஹரி நிஷாந்த் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஹரி நிஷாந்த் 4 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் இணைந்த சுரேஷ் - ஆதித்யா கூட்டணி அதிரடியாக ஆடியது. ஒவ்வொரு ஓவருக்கு ஒரு பவுண்டரியை விளாசி ரன் ரேட்டை சிறப்பாக கட்டுக்குள் வைத்திருந்தது. சிறப்பாக ஆடிய சுரேஷ் 40 ரன்களிலும், ஆதித்யா 73 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
19 ஓவர்களில் மதுரை அணி 193 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி ஓவரில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. அதில் 2வது பந்திலேயே ஜெகதீசன் கவுசிக் சிக்சர் விளாச, 4வது பந்தில் சிறப்பாக ஆடிய ஸ்வப்னில் சிங் 48 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 2 பந்தில் 2 சிக்சர் அடித்தால் வெற்றி என்ற சூழலில், சரவணன் களமிறங்கி 5வது பந்தில் சிக்சர் அடித்தார். ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே சேர்த்ததால், நெல்லை அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனால் டிஎன்பிஎல் குவாலிஃபயர் 2 சுற்றுக்கு நெல்லை அணி முன்னேறியுள்ளது. அதில் குவாலிஃபயர் முதல் சுற்றில் தோல்வியடைந்த திண்டுக்கல் அணியை எதிர்கொள்ள உள்ளது. இதில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டியிலும் கோவை அணியை எதிர்கொள்ள வேண்டும் என்பதால், இந்தப் போட்டி மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.