மும்பை: நேபாள கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் தீபேந்திர சிங் ஐரி, ஸ்காட்லாந்துக்கு எதிரான 2026 டி20 உலகக் கோப்பை போட்டியில் அதிரடியாக ரன்களைக் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 171 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய நேபாளம், ஐரி அடித்த அரைசதம் மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது.
மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், பாட்யால் தலைமையிலான நேபாள அணி, 19.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. ஐரி தனது இன்னிங்ஸின் போது நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களை விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு குல்சன் ஜாவுடன் (17 பந்துகளில் 24 ரன்கள்) இணைந்து 73 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். இது நேபாளத்தின் மூன்றாவது டி20 உலகக் கோப்பை வெற்றி மட்டுமல்லாமல், 2014-க்குப் பிறகு கிடைத்த முதல் வெற்றியுமாகும்.

இந்த அபார ஆட்டத்திற்காக தீபேந்திர சிங் ஐரிக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. மேலும், அவர் அடித்த இந்த அரை சதம், டி20 உலகக் கோப்பையில் ஒன்றுக்கும் மேற்பட்ட அரை சதம் அடித்த முதல் நேபாள வீரர் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைக்க உதவியது.
டி20 உலகக் கோப்பையில் ஒரு அரை சதம் அடித்த மற்றொரு நேபாள வீரர் சுபாஷ் ககுரெல் ஆவார். அவர் மார்ச் 20, 2014 அன்று வங்கதேசத்தின் சட்டோகிராமில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 56 ரன்கள் எடுத்திருந்தார். ஐரிக்கு முன், இந்த கவுரவத்தைப் பெற்ற ஒரே நேபாள வீரர் இவரே ஆவார்.
ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியின் முன்னர், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேபாளத்தின் மூன்றாவது குரூப் சி போட்டியில், ஐரி 46 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். மேலும், 2024 மார்ச் 16 அன்று ஹாங்காங்கிற்கு எதிராக 41 பந்துகளில் 48 ரன்கள், 2026 பிப்ரவரி 8 அன்று இங்கிலாந்துக்கு எதிராக 29 பந்துகளில் 44 ரன்கள் என மற்ற முக்கியமான பங்களிப்புகளையும் அவர் அளித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் அசோசியேட் அணிகளின் வீரர்களால் அடிக்கப்பட்ட அதிவேக அரை சதங்களில், ஐரியின் 23 பந்து அரைசதம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. 2014-ல் அயர்லாந்துக்கு எதிராக சில்கெட்டில் 17 பந்துகளில் அரை சதமடித்த நெதர்லாந்தின் ஸ்டீபன் மைபர்க் இப்பட்டியலில் முதலிடத்திலும், 2024-ல் கனடாவுக்கு எதிராக டல்லாஸில் வைத்து 22 பந்துகளில் அரை சதமடித்த அமெரிக்காவின் ஆரோன் ஜோன்ஸ் இரண்டாம் இடத்திலும் உள்ளனர்.
இத்தாலியின் பென் மெனென்டி 2026-ல் இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தாவில் வைத்து 22 பந்துகளில் ஒரு அரை சதம் அடித்தார். அமெரிக்காவின் சஞ்சய் கிருஷ்ணமூர்த்தியும் (23 பந்துகள்), 2026-ல் நமீபியாவுக்கு எதிராக சென்னையில் வைத்து ஐரியுடன் இணைந்து மூன்றாவது வேகமாக அரை சதம் அடித்தவராகப் பதிவாகியுள்ளார்.
டி20 சர்வதேச போட்டிகளில் நேபாள அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையையும் 26 வயதான தீபேந்திர சிங் ஐரி பெற்றுள்ளார். இதுவரை 94 டி20 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 2125 ரன்களைக் குவித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 110 ரன்கள் நாட் அவுட் ஆகம். மேலும், அவர் 12 அரை சதங்களை அடித்துள்ளார். உலகிலேயே அதிவேக டி20 சர்வதேச அரை சதம் (9 பந்துகள்) அடித்தவர் என்ற உலக சாதனையை ஐரி தன்வசம் வைத்துள்ளார்.