காத்மாண்டு : இந்த மாதிரி கிரிக்கெட் ரசிகர்கள் நம் நாட்டில் இல்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு நேபாள நாட்டு கிரிக்கெட் ரசிகர்கள் தங்கள் அணிக்காக கூடி இருந்தனர்.
டி20 உலகக்கோப்பை தொடருக்கான தகுதி பெறும் முக்கிய போட்டியில் தங்கள் அணிக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நேபாள கிரிக்கெட் அணி ரசிகர்கள் எந்த வசதியும் இல்லாத, மேற்கூரை கூட இல்லாத மைதானத்தில் கூடி இருந்தனர்.
2024 உலகக்கோப்பை டி20 தொடருக்கான தகுதிச் சுற்று தொடரின் அரை இறுதிப் போட்டி நேபாள நாட்டில் நடைபெற்றது. இரண்டு அரை இறுதி போட்டிகள் நடந்த நிலையில், முதல் அரை இறுதியில் நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதின.

அரை இறுதிப் போட்டியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறும் இரண்டு அணிகளும் 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் என்பதால், சொந்த மண்ணில் ஆடும் நேபாள அணிக்கு பெருமளவில் ஆதரவு அளிக்க நேரில் வந்தனர் ரசிகர்கள்.
இந்த அரை இறுதிப் போட்டி முல்பானி நகரில் நடைபெற்றது. சிறிய மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியைக் காண சில ஆயிரம் ரசிகர்கள் கூடி இருந்தனர். மைதானத்தில் இடம் இன்றி சிறிய மதில் சுவர் மட்டுமே மைதானத்தை சுற்றி இருந்ததால் அங்கும் ரசிகர்கள் நின்றபடி போட்டியை கண்டு தங்கள் அணிக்கு ஆதரவு அளித்தனர்.
இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் விரித்யா அரவிந்த் 51 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். அடுத்து பேட்டிங் செய்த நேபாள அணிக்கு ஆசிப் ஷேக் அபார துவக்கம் அளித்தார். அவர் 64 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். கேப்டன் ரோஹித் பௌடெல் 34 ரன்கள் எடுத்தார்.
நேபாள அணி 17.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேபாள அணி வெற்றி பெற்று 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றதை அடுத்து அந்த நாட்டு ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடினர்.
மற்றொரு அரை இறுதியில் ஓமன் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பஹ்ரைன் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அந்த அணியும் 2024 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெற்றது.