காத்மாண்டு: ஒருதின கிரிக்கெட் போட்டி அந்தஸ்து பெற்றுள்ள நேபாளம், நெதர்லாந்துக்கு எதிராக வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகப் போட்டியில் விளையாட உள்ளது.
ஒருதின கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் அந்தஸ்தை தற்போது 12 நாடுகளுக்கு ஐசிசி வழங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகியவை ஒருதினப் போட்டிகளில் விளையாடும் நாடுகளாகும்.

உலகக் கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டம் ஜிம்பாப்வேயில் இந்தாண்டு துவக்கத்தில் நடந்தது. அப்போது, நேபாளத்துக்கு ஒருதினப் போட்டிக்கான அந்தஸ்தை ஐசிசி உறுதி செய்தது.
அந்த தகுதிச் சுற்று போட்டியில் 7வது இடத்துக்கான ஆட்டத்தில் நெதர்லாந்தும் நேபாளமும் மோதின. அதில் நெதர்லாந்து வென்றது. இருந்தாலும் அந்த ஆட்டத்துக்கு ஐசிசி அங்கீகாரம் கிடையாது.
தற்போது ஐசிசியின் அங்கீரம் பெற்றுள்ள நேபாளம், ஒருதினப் போட்டிகளில் அறிமுகமாகிறது. நெதர்லாந்தில், ஆகஸ்ட் 1 மற்றும் 3ம் தேதிகளில் நடக்கும் ஒருதினப் போட்டிகளில் நேபாளம் விளையாட உள்ளது.
நேபாளத்தின் 17 வயதாகும் சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லாமிச்சனே இந்த ஐபிஎல் சீசனில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடினார்.