ஐபிஎல் நிலை
மிகச் சிறிய நாடான நேபாளத்தில், சிறிய அளவில் நடைபெற இருந்த டி20 தொடர் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பிரம்மாண்ட டி20 தொடரான ஐபிஎல் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எவரெஸ்ட் பிரீமியர் லீக்
ஐபிஎல் போல பிரம்மாண்ட டி20 கிரிக்கெட் தொடர்கள் உலகம் முழுதும் நடந்து வரும் நிலையில், கிரிக்கெட்டில் வளர்ந்து வரும் நேபாள நாட்டில் எவரெஸ்ட் பிரீமியர் லீக் என்ற சிறிய டி20 தொடர் நடைபெற இருந்தது. அதில் நட்சத்திர வீரராக கிறிஸ் கெயில் மட்டுமே பங்கேற்க இருந்தார்.
நேபாளத்தில் பாதிப்பு
இந்த நிலையில், நேபாள நாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த நாட்டு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துவங்கி உள்ளது.
தள்ளி வைப்பு
மக்கள் கூட்டமாக கூட வேண்டாம் என நேபாள அரசு அறிவித்துள்ளது. மேலும், எவரெஸ்ட் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை தள்ளி வைத்தும் இருக்கிறது. பெரிய எதிர்பார்ப்பு இருந்தாலும், மக்களுக்கும், வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக போட்டி நிர்வாகிகள் கூறி உள்ளனர்.
விரைவில் நடக்கும்
தற்போது தள்ளி வைக்கப்பட்டாலும், 2020ஆம் ஆண்டிலேயே கொரோனா பாதிப்பு நீங்கிய உடன் எவரெஸ்ட் பிரீமியர் லீக் தொடர் நடைபெறும் என நிர்வாகிகள் கூறி உள்ளனர். சிறிய தொடருக்கே இந்த நிலை என்றால், ஐபிஎல் நிலை என்ன?
ஐபிஎல் பாதிப்பு
பிசிசிஐ கொரோனா பற்றி அச்சம் இல்லை என கூறி வந்தாலும், என்ன செய்வது? என ஆலோசனை செய்து வருகிறது. விளையாட்டு அமைச்சகம் மற்றும் சுகாதார அமைச்சகத்திடம் பிசிசிஐ ஆலோசனை செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.