பார்படாஸ்: டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா வென்று கோப்பையைத் தட்டி தூக்கியது. இந்த போட்டியில் வெல்ல சூர்யகுமார் யாதவ் பிடித்த அந்த அட்டகாசமான கேட்ச் முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது. இதற்கிடையே அவர் டி20 உலகக் கோப்பையுடன் பெட் ரூமில் தூங்குவது போன்ற போட்டோவை எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த போட்டோ இணையத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்றைய தினம் பார்படாஸில் நடைபெற்றது. அதில் இந்திய அணி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி கடைசி வரை போராடிய போதிலும் அவர்களால் வெல்ல முடியவில்லை. கடைசிக் கட்டத்தில் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களை எடுக்க முடியாமல் போனதே இதற்குக் காரணமாகும்.
சூர்யகுமார் யாதவ்: இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் பேட்டிங்கில் பெரியளவில் சோபிக்கவில்லை. 4 பந்துகளில் 3 ரன்களை எடுத்த அவர் ரபாடா பந்துவீச்சில் கிளாசெனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பேட்டிங்கில் அவர் ரன் எடுக்கவில்லை என்ற போதிலும் அதற்கு வட்டியும் முதலுமாகச் சேர்த்து ஃபீல்டிங்கில் கலக்கிவிட்டார்.
16 ஓவர் முடியும் போது தென்னாப்பிரிக்கா எளிதாக வெல்லும் சூழலில் இருந்தது. 17ஆவது ஓவரை ஹர்திக் வீசிய நிலையில், முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க கிளாசென் முயன்றார். இருப்பினும், பவுன்டரி லைனில் வைத்து அட்டகாசமான கேட்ச் பிடித்தார் சூர்யகுமார் யாதவ். இந்த உலகக் கோப்பை தொடரின் மிகச் சிறந்த கேட்ச்களில் இதுவும் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. அதேபோல கடைசி ஓவரில் ரபாடா கேட்ச்சை பிடித்ததும் சூர்யகுமார் யாதவ் தான்.

போட்டோ: இந்தியா கோப்பையை வென்றதில் சூர்யகுமார் யாதவின் பங்கு முக்கியமானது என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. கிளாசென் அசுர ஃபார்மில் இருந்த போது அட்டகாசமான கேட்ச் மூலம் அவரை அவுட் ஆக்கினார் சூர்யகுமார் யாதவ். இதற்கிடையே கோப்பை வென்ற சூர்யகுமார் யாதவ் இது தொடர்பான ஃபோட்டோக்களை தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி இன்ஸ்டாகிராம் தளத்தில் அவர் பகிர்ந்த போட்டோ தான் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அவரும் அவரது மனைவியும் பெட்டில் உலகக் கோப்பையுடன் தூங்குவது போன்ற படத்தை அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் க்யூட்டாக இருப்பதாகவே பலரும் கூறி வருகிறார்கள். அதேநேரம் சிலர் இதை மிட்செல் மார்ஷ் உடன் ஒப்பிட்டும் கருத்து கூறி வருகிறார்கள்.
அதாவது கடந்தாண்டு இந்தியாவில் 50 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெற்றது. அதில் இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியால் 240 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதை ஆஸ்திரேலியா 43 ஓவர்களில் சேஸ் செய்து எளிதாக வென்றது. அப்போது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையைக் காலில் வைத்தபடி போஸ் கொடுத்திருந்தார்.
இது இணையத்தில் மிகப் பெரிய விவாதத்தைக் கிளப்பி இருந்தது. உலகக் கோப்பையை மதிக்காமல் காலில் வைத்தபடி ஃபோஸ் கொடுத்துள்ளதாகச் சர்ச்சையானது. அதையும் இதையும் ஒரு சிலர் ஒப்பிட்டுப் பேசி வருகிறார்கள்.