அடிலைட்: உலகக் கோப்பை நாக் அவுட் போட்டிகளின்போது ஆன்பீல்ட் அம்பயர்களுக்கும், டிவி அம்பயர்களுக்கும் இடையிலான தகவல் தொடர்புகளை ரசிகர்களும் கேட்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை வரலாற்றில் இது முதல் முறையாகும். நாளை முதல் உலகக் கோப்பைப் போட்டியில் நாக் அவுட் போட்டிகள் தொடங்குகின்றன. சிட்னியில் முதல் காலிறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் இலங்கையும், தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன.

நாளையிலிருந்து தொடங்கும் நாக் அவுட் போட்டிகளின்போது வீரர்கள் கேட்கும் அப்பீல்கள் தொடர்பாக, ஆன்பீல்ட் அம்பயர்களும், டிவி அம்பயர்களும் ஆலோசனை நடத்துவதை அனைவரும் கேட்க ஐசிசி ஏற்பாடு செய்துள்ளது. போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் அம்பயர்களுக்குள் பேசிக் கொள்வதை நேரடியாக ஒலிபரப்பும்.
இதுதொடர்பாக ஏற்கனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த ஒரு நாள் போட்டித் தொடரின்போது பரீட்சார்த்த சோதனை நடத்தப்பட்டது. அது வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது அதை உலகக் கோப்பையில் ஐசிசி அறிமுகம் செய்கிறது.
நடுவர் தீர்ப்புகளை எதிர்த்து அப்பீல் செய்வது, டிஆர்எஸ் உள்ளிட்ட அனைத்து ஆலோசனைகளையும் ரசிகர்களும் இனி நேரில் கேட்க முடியும்.