பிசிசிஐ விண்ணப்பம்
தலைமை பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதியாக ஜூலை 9-ஆம் தேதியை பிசிசிஐ நிர்ணயித்தது. இதைத் தொடர்ந்து அப்பணிக்கு 7 வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
யார்? யார்?
இந்திய முன்னணி வீரர் வீரேந்திர ஷேவாக், லால்சந்த் ராஜ்புட், தோடா கணேஷ், வெங்கடேஷ் பிரசாத், முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டாம் மூடி, பாகிஸ்தான் முன்னாள் கோச் ரிச்சர்டு பைபஸ், மேற்கு இந்திய தீவுகளின் முன்னாள் கோச் ஃபில் சைமன்ஸ் உள்ளிட்டோர் இந்தியாவின் தலைமை கோச் பதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தலைமை கோச் பதவிக்கு கோஹ்லியின் ஆதரவாளரான ரவி சாஸ்திரியும் முறையாக விண்ணப்பித்துள்ளார்.
ஜூலை 10-இல் நேர்காணல்
இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என்று 3 பேர் கொண்ட கிரிக்கெட் வழிக்காட்டு குழு உறுப்பினர்களில் ஒருவரான சௌரவ் கங்குலி தெரிவித்தார். நேர்காணலுக்கு இன்னும் ஒரு சில நாள்களே உள்ளதால் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் பணியில் பிசிசிஐ தீவிரமாக இறங்கியுள்ளது.
ரவி சாஸ்திரிக்கு வாய்ப்பு
இதில், இந்திய அணியின் முன்னாள் வீரரான ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், மேற்கு இந்திய தீவுகளில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லியை பிசிசிஐ தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ராகுல் ஜோரி சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து கேட்க திட்டம்
ஜமைக்காவில் விராத் கோஹ்லி மற்றும் இந்திய அணி வீரர்களை சந்திக்க உள்ள ராகுல் ஜோரி, புதிய தலைமை பயிற்சியாளர் தொடர்பாக அவர்களிடம் கருத்து கேட்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நிர்வாகக் குழுவின் அனுமதியுடனே ராகுல் ஜோரி ஜமைக்கா புறப்பட்டுச் சென்றிருப்பதாகவும், பயிற்சியாளர் நியமனம் தொடர்பாக கேப்டன் கோலியின் கருத்துக்களை கேட்டு வரும்படி அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.