இனி அவங்களுக்கு டீமில் இடமில்லை.. கோலியுடன் சேர்ந்து ஸ்கெட்ச் போட்டு தூக்கும் ரவி சாஸ்திரி..?
மும்பை: 30 வயதை தாண்டிய வீரர்களை அணியில் இருந்து கழற்றிவிட தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பிளான் பண்ணியிருப்பதால் ரோகித் உள்ளிட்டோரின் கிரிக்கெட் வாழ்க்கைக்கு பங்கம் வரப்போகிறது என்று சொல்லலாம்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவிசாஸ்திரி மீண்டும் நியமிக்கப்பட்டார்.பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்த விவகாரத்தில் அதோ, இதோ என்று சொத்தை காரணங்களை கூறி ரவி சாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக்கி இருக்கிறது பிசிசிஐ.
முன்பே பேசி வைத்துவிட்டு, நேர்காணல் என்ற பெயரில் ஒன்றை நடத்திவிட்டு மீண்டும் ரவி சாஸ்திரியையே ஏன் பயிற்சியாளராக அறிவிக்க வேண்டும் என்று ரசிகர்கள் டுவிட்டரில் மாசாக கிண்டலடித்து வருகின்றனர். அவர்களின் கமெண்டுகள் ஓய்ந்து பாடில்லை.

கமிட்டிக்கு நன்றி
தமது எதிர்கால திட்டம் குறித்து புதிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருப்பதாவது: பயிற்சியாளராக தேர்வு செய்த கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டிக்கு முதலில் நன்றி. அணியின் கட்டமைப்பில் நானும் அங்கம் வகிப்பது பெருமையும், கவுரவமும் தருகிறது.

வருகிறது மாற்றம்
கடந்த 2 ஆண்டுகளில் இந்திய அணியின் செயல்பாடு மிக அற்புதம் என்பதை அனைவரும் பார்த்திருப்பீர்கள். இனி வரும் 2 ஆண்டுக்குள் அணியில் அதிரடி மாற்றங்கள் நடப்பதை காணலாம். நிறைய இளம் வீரர்கள் வர இருக்கின்றனர்.

நல்ல அணியாக்குவேன்
குறிப்பாக டெஸ்ட் போட்டிக்கு அவர்களை தயார்படுத்த வேண்டும். பவுலிங் பயிற்சியாளர் குழுவுக்கு 3 அல்லது 4 வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண்பது ரொம்ப அவசியமாகும். இது கடினமான, அதே நேரத்தில் சவாலான பணி. நான் பயிற்சியாளராக நிறைவு பெற்று செல்லும் போது, அணியை மகிழ்ச்சியான, நல்ல நிலையில் ஒப்படைத்துவிட்டு செல்வேன் என்றார்.

சாஸ்திரி பிளான்
ரவி சாஸ்திரியின் இந்த கருத்தை பார்த்தால் ஏதோ எதிர்கால திட்டம் என்று ஒன்றை கூறுகிறார் என்று தான் தோன்றும். ஆனால் அதில் உள்ள சில முக்கிய பிளான்களை பற்றி இப்போது களத்தில் விவாதிக்க தொடங்கி இருக்கின்றனர் முன்னாள் ஜாம்பவான்கள்.

30 வயது வீரர்கள்
அதாவது.. ரவி சாஸ்திரி கூறும் ஒரே முக்கியமான விஷயம் இதுதான். 30 வயதை தாண்டியவர்களுக்கு விரைவில் அணியில் இடம் இல்லை என்று. அவர் சொல்வதை வைத்து பார்க்கும் போது, இனி அணியில் 30 வயதிற்கு மேற்பட்ட வீரர்கள் இடம் பிடிப்பது கடினம் என்றே தெரிகிறது.

யார்? யார்?
குறிப்பாக தற்போது 30 வயதை தாண்டிய கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் கண்டிப்பாக மீண்டும் அணியில் இடம் பெறுவது கடினம். தினேஷ் கார்த்திக்கு இனிமே இல்லை என்பது முன்பே தெரிந்த ஒன்று. அந்த பட்டியலில் கேதாரும் இணைவார் என்று சொல்லலாம்.

கோலியுடன் சேர்ந்து?
அதனை தாண்டி புதிதாக டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மாவிற்கு 30 வயதிற்கு மேல் ஆகிறது. அவருக்கு பதிலாக ஒரு திறமை வாய்ந்த இளம் வீரர் இறக்கினால் இன்னும் சில ஆண்டுகளில் அவர் தயாராகி விடுவார். இது தான் ரவி சாஸ்திரியின் எண்ணம் என்றும் அதன் பின்னணியில் ஆளுமையை செலுத்தி கோலி செய்திருக்கலாம் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.

ரோகித் என்னாவார்?
இது நடக்குமானால் ரோகித் சர்மாவும் கழட்டி விட அதிக வாய்ப்புகள் உள்ளது. டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் அனுப்பி வைக்கப்படுவார் என்று சொல்லலாம். பவுலிங் யூனிட்டை பார்த்தால், புவனேஸ்வர் குமார் நிலைமை எப்படியாகும் என்று தெரியவில்லை. அவருக்கும் 30 வயது ஆகிறது. வயது என்பதை மனதில் கொண்டு, அணியை தயார் படுத்தினால் அவருக்கும் டாடா, பைபை தான்.


Click it and Unblock the Notifications