மறுபடியும் மொதல்ல இருந்தா? இந்திய அணியை விடாது துரத்தும் பிரச்சினை.. பும்ராவுக்கு மாற்று யார் தான்?
மும்பை: ஜஸ்பிரித் பும்ராவுக்கு மாற்று வீரரை தேர்வு செய்வதில் மீண்டும் பழைய பிரச்சினையே தலை தூக்கியுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியை உறுதி செய்வதில் தான் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு காரணம் ஜஸ்பிரித் பும்ராவின் காயம்.

இந்திய அணி மாற்றம்
முதுகு வலி பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் பும்ரா டி20 உலகக்கோப்பையில் இருந்து விலகினார். இதனையடுத்து மாற்று வீரரை தேர்வு செய்யும் பணிகளில் பிசிசிஐ ஈடுபட்டுள்ளது. பும்ரா போன்ற ஒரு ஸ்டார் வீரரின் இடத்தை நிரப்ப முகமது ஷமி, தீபக் சஹார், முகமது சிராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்தன.

தீபக் சஹார் உடல்நிலை
அதன்படி இவர்கள் 3 பேருமே தங்களது ஃபார்மை நிரூபித்து காட்டுவதற்காக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க தொடரில் தீபக் சஹார் பேட்டிங், பவுலிங் என அசத்தினார். முதுகுவலி காரணமாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உள்ள தீபக், விரைவில் குணமடைவார் எனக் கூறப்பட்டுள்ளது.

சிராஜ் தரும் அழுத்தம்
கொரோனாவில் இருந்து குணமடைந்திருந்த சீனியர் வீரர் முகமது ஷமி நேற்று தனது நடத்தப்பட்ட உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தாராளமாக விளையாடலாம் என அறிவித்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க, முகமது சிராஜும் தனக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளார். தென்னாப்பிரிக்காவுடனான டி20 தொடரில் சொதப்பிய அவர், ஒருநாள் தொடரில் மிகச்சிறப்பாக பவுலிங் செய்து தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார்.

மீண்டும் அதே பிரச்சினை
இதன் மூலம் மீண்டும் 3 பேருமே பும்ராவின் இடத்திற்கு தகுதியாக உள்ளனர் என்று நிரூபணம் ஆகியுள்ளதால், யாரை தேர்வு செய்வது என்ற குழப்பம் எழுந்துள்ளது. வரும் உலகக்கோப்பை அணியில் மாற்றம் மேற்கொள்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 15 ஆகும். 4 நாட்கள் மட்டுமே மீதம் இருப்பதால் பிசிசிஐ தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications