
கொரோனா வைரஸ் தாக்கம்
2020ஆம் ஆண்டை புரட்டி போட்டுள்ளது கொரோனா வைரஸ். மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் கொரோனாவைரஸ் காரணமாக உலகில் இதுவரை 21 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,36,000க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர்.

கிரிக்கெட் தொடர்கள் நிறுத்தி வைப்பு
இந்த வைரஸ் பரவலை தடுக்க மக்கள் கூட்டமாக கூடக் கூடாது என்பதால் உலகில் விளையாட்டுப் போட்டிகள் பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளும் அடங்கும். மார்ச் மாதம் 13ஆம் தேதிக்கு பின் எந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியும் நடைபெறவில்லை.

டி20 உலகக்கோப்பை தொடர்
இந்த நிலையில், அக்டோபர் மாதம் நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரும் நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் ஐந்து மாதங்கள் இருந்தாலும், கொரோனா வைரஸ் தாக்கம் அப்போது எந்த நிலையில் இருக்கும் என்பதை ஊகிக்க முடியாத நிலையே உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர்
டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்புக்கு முக்கியமான தொடர் ஆகும். இந்த தொடர் ரத்துசெய்யப்பட்டால், பெரும் நஷ்டம் ஏற்படும்.

ஆஸ்திரேலியாவின் ஏற்பாடுகள்
கிரிக்கெட் போட்டிகளை முடிந்த வரை தடை இல்லாமல் நடத்த வேண்டும் என திட்டமிடும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பு, செப்டம்பர் மாதம் வரை ஆஸ்திரேலியாவுக்கு வெளிநாட்டினர் வர விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, அக்டோபர் மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகளை நடத்த திட்டமிட்டு வருகிறது.

புதிய ஹோட்டல்
இந்த நிலையில் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றால் அங்கே அடிலெய்டு ஓவல் நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஹோட்டலில் அவர்களை தங்க வைத்துக் கொள்ள அந்த ஹோட்டல் நிர்வாகம் சம்மதம் கூறி உள்ளது.

சிறப்பு பயிற்சி
வெளிநாட்டினர் எந்த நாட்டுக்குள் சென்றாலும் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டிய கட்டாயம் இருப்பதால், இந்திய அணி, ஆஸ்திரேலியா சென்றால் அங்கே 14 நாட்கள் தனிமையில் இருக்க இந்த ஹோட்டலில் தங்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அங்கே வலைப் பயிற்சி செய்யவும் வசதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

தீவுகள் தயார்
இந்த ஹோட்டல் மட்டுமின்றி கங்காரூ தீவு மற்றும் ரோட்நெஸ்ட் தீவு ஆகிய இடங்களிலும் மற்ற அணி கிரிக்கெட் வீரர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாடுகள் மூலம் எப்படியாவது கிரிக்கெட் தொடர்களை திட்டமிட்டபடி நடத்த ஆஸ்திரேலியா முயற்சி செய்து வருகிறது.

இது சாத்தியமா?
இந்திய வீரர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு இடையே ஆஸ்திரேலியா செல்வது சந்தேகம் தான். அக்டோபர் மாதத்திற்குள் பாதிப்பு குறையும் பட்சத்தில் இந்திய அரசின் வழிமுறைகளையும் கருத்தில் கொண்டு தான் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா செல்லும்.

ஐபிஎல் தொடர் தள்ளி வைப்பு
இதற்கிடையே ஏப்ரல் - மே மாதங்களில் நடக்க வேண்டிய ஐபிஎல் தொடர் அடுத்த அறிவிப்பு வரும் வரை கால வரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடரும் அடுத்து செப்டம்பர் - அக்டோபரில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications